இந்தியாவில் கார் உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டிய ஃபோக்ஸ்வேகன் குழுமம்... கலக்கறாங்களே!
ஃபோக்ஸ்வேகன் குழுமம் இந்தியாவில் கார் உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் 1.5 மில்லியன் (1.5 Million) கார்களை உற்பத்தி செய்துள்ளதாக, ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Skoda Auto Volkswagen India Private Limited - SAVWIPL) நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. 1.5 மில்லியன் என்பது, 15 லட்சம் கார்கள் ஆகும். இது மிகப்பெரிய உற்பத்தி எண்ணிக்கை என்பதில் சந்தேகமில்லை.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி (Audi), போர்ஷே(Porsche) மற்றும் லம்போர்கினி (Lamborghini) ஆகிய 5 ஃபோக்ஸ்வேகன் பிராண்டுகளின் இந்திய செயல்பாடுகளை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சஹான் மற்றும் அவுரங்காபாத்தில் உள்ள ஷேந்திரா ஆகிய இடங்களில் இந்த குழுமத்தின் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே 'மேட் இன் இந்தியா' ஃபோக்ஸ்வேகன் டி-க்ராஸ் (Volkswagen T-Cross) கார்களை ஏற்றுமதி செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, இந்த குழுமம் இந்தியாவில் இருந்து 5,45,700 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் குழுமத்தின் 15 லட்சமாவது காராக ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. புனேவின் சஹான் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் தங்களது விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகதான் ஸ்கோடா குஷாக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கோடா குஷாக் மட்டுமல்லாது, ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா ஸ்லாவியா(Skoda Slavia) ஆகிய கார்களும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்(Volkswagen Virtus) கார் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் உற்பத்தி பணிகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தொடங்கி விட்டது. ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் குழுமத்தின் குஷாக் மற்றும் டைகுன் ஆகிய இரண்டு கார்களும், மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை.

இந்திய சந்தையில் கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) உள்ளிட்ட கார்களுடன் அவை போட்டியிட்டு வருகின்றன. அதே நேரத்தில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஸ்கோடா ஸ்லாவியா காரும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் செடான் ரகத்தை சேர்ந்தவை. ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (MarutiSuzuki Ciaz) ஆகியவைதான் இவற்றின் முக்கியமான போட்டியாளர்கள் ஆகும்.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் குழுமம் தற்போது இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. தங்களது பழைய கார்களுக்கு மாற்றாக புதிய கார்களை இந்த குழுமம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளது.

ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் காருக்கு பதிலாக ஸ்லாவியா செடானை அறிமுகம் செய்தது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வெண்ட்டோ காருக்கு மாற்றாக விர்டுஸ் செடானை அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவின் வாகன உற்பத்தி துறை சமீப காலமாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ், செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை என அடுத்தடுத்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பிரச்னைகளை சமாளித்து, ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் குழுமம் 15 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய கார்களையும் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் குழுமம் இந்திய சந்தையில் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தற்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








