பங்காளி சண்டை... ஸ்கோடா குஷாக்கை வீழ்த்தியது ஃபோக்ஸ்வேகன் டைகுன்... இவ்ளோ கார் சேல்ஸ் ஆகுதா?
ஸ்கோடா குஷாக் காரை, ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் வீழ்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் 'MQB A0 IN' பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் கார் இதுதான். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாக ஸ்கோடா நிறுவனம் இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஸ்கோடா குஷாக் காரை தொடர்ந்து, ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய இரண்டுமே மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்கள் ஆகும்.

இந்த இரண்டு கார்களும் ஒரே பிளாட்பார்ம் அடிப்படையில்தான், அதாவது 'MQB A0 IN' பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த இரண்டு கார்களிலும் ஒரே மாதிரியான இன்ஜின் தேர்வுகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கார்களும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்களுக்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன.

இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் ஸ்கோடா குஷாக் காரை, ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி வீழ்த்தியுள்ளது. ஆனால் மிகவும் சிறிய வித்தியாசத்தில்தான் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரிடம், ஸ்கோடா குஷாக் வீழ்ந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,388 டைகுன் கார்களை விற்பனை செய்துள்ளது.

அதே சமயம் ஸ்கோடா நிறுவனம் 2,307 குஷாக் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ஸ்கோடா குஷாக் காரை, ஃபோக்ஸ்வேகன் டைகுன் வீழ்த்தியுள்ளது. ஆனால் இரண்டு கார்களுக்கு இடையேயான வித்தியாசம் வெறும் 81 யூனிட்கள் மட்டும்தான். இதற்கிடையே இந்த இரண்டு கார்களுமே மாதாந்திர ரீதியில் பார்த்தால் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஸ்கோடா நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் 2,608 குஷாக் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,307 ஆக குறைந்து விட்டது. இது 11.54 சதவீத வீழ்ச்சியாகும். மறுபக்கம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் 2,432 டைகுன் கார்களை விற்பனை செய்திருந்தது.

ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,388 ஆக குறைந்துள்ளது. இது 1.81 சதவீத வீழ்ச்சியாகும். இந்த இரண்டு கார்களும் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. அதற்கு பிறகுதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. எனவே இந்த இரண்டு கார்களின் வருடாந்திர விற்பனை ஒப்பீட்டை செய்ய முடியாது.

ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது இந்திய சந்தையில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளன. விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, புதிய கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்யும் பணிகளில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

இதில் ஸ்கோடா நிறுவனமானது, குஷாக் காரை தொடர்ந்து, ஸ்லாவியா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முதலில் ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் இன்ஜின் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து ஸ்லாவியா காரின் 1.5 லிட்டர் இன்ஜின் மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் காரை தொடர்ந்து, விர்டுஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வரும் மே மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக வரும் மார்ச் 8ம் தேதி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. ஆனால் வரும் மார்ச் 8ம் தேதி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் விலை அறிவிக்கப்படாது. இதற்கு நாம் மே மாதம் வரை காத்திருக்க வேண்டும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








