இந்தியாவை விட்டு வெளியேறி விடும் என பேசப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்... ராஜநடை போட தொடங்கிய ஸ்கோடா!
இந்தியாவை விட்டு வெளியேறி விடும் என பேசப்பட்ட நிலையில், ஸ்கோடா நிறுவனம் ராஜநடை போட தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 5,649 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்திருந்த கார்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 1,159 மட்டுமே. இதன் மூலம் விற்பனையில் 387.4 சதவீத வளர்ச்சியை ஸ்கோடா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஸ்கோடா நிறுவனம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் ஸ்கோடா நிறுவனத்தின் சந்தை பங்கு 1.8 சதவீதம் ஆகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்கோடா நிறுவனத்தின் சந்தை பங்கு வெறும் 0.4 சதவீதமாக இருந்தது.

ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் ஸ்கோடா நிறுவனத்தின் சந்தை பங்கு 1.4 சதவீதம் அதிகரித்து, 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் ஸ்கோடா நிறுவனம் 25 சதவீதம் என்ற மிக சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் 4,503 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அதன்பின் வந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 5,649 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 25 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் சமீப காலமாக ஸ்கோடா நிறுவன கார்களின் விற்பனை பிரம்மிக்கத்தக்க வகையில் உயர்ந்து வருவதை இந்த புள்ளி விபரங்கள் நமக்கு மிக தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

இதற்கு இந்தியா 2.0 (India 2.0) திட்டம்தான் காரணம். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ள ஸ்கோடா நிறுவனம் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், விற்பனையை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகவே ஸ்கோடா நிறுவன கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார் என்ற பெருமையை ஸ்கோடா ஸ்லாவியா பெற்றுள்ளது. இது மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு மார்ச் மாதம் 2,665 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனையான ஸ்கோடா கார்களின் பட்டியலில் குஷாக் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 2,499 குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு இடங்களில் உள்ள ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்கள், இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டவை ஆகும்.

அவை தற்போது ஸ்கோடா நிறுவனத்திற்கு மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தர தொடங்கியுள்ளன. இந்த பட்டியலில் ஸ்கோடா ஆக்டோவியா மூன்றாவது இடத்தையும், ஸ்கோடா சூப்பர்ப் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் தலா 180 ஆக்டோவியா கார்களையும், 180 சூப்பர்ப் கார்களையும் விற்பனை செய்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 5 ஸ்கோடா ஆக்டேவியா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. இது 3,500 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் ஸ்கோடா ஆக்டேவியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மறுபக்கம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 250 ஸ்கோடா சூப்பர்ப் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 180 ஆக குறைந்துள்ளது. இது 28 சதவீத வீழ்ச்சியாகும். எனவே ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை ஸ்கோடா கோடியாக் பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் 125 கோடியாக் கார்களை ஸ்கோடா விற்பனை செய்துள்ளது.

லாபம் ஈட்ட முடியாத காரணத்தால், இந்தியாவில் இருந்து சமீப ஆண்டுகளாக ஒரு சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. இந்த வகையில் போதிய விற்பனை எண்ணிக்கை இல்லாமல் தடுமாறி வந்த ஸ்கோடா நிறுவனமும் இந்தியாவை விட்டு வெளியேறி விடும் என ஒரு சமயத்தில் பலரும் பேச தொடங்கினர்.

ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, ஸ்கோடா நிறுவனம் வெற்றி பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் டைகுன் போன்ற புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் இருந்து அடுத்து வெளிவரவுள்ள முக்கியமான தயாரிப்பு விர்டுஸ் செடான் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








