விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஸ்கோடா ஆக்டேவியா... இந்த கார் விற்பனைக்கு வந்து 21 வருஷம் ஆகுது...
ஹோண்டா சிவிக், ரெனால்ட் ஃப்ளூவன்ஸ், ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா, ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் டொயோட்டா கொரோல்லா ஆகிய எக்ஸிகியூட்டிவ் செடான் கார்கள் அனைத்தும் இந்திய சந்தையை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், நீண்ட ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றது ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia). இந்த காரே தற்போது விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நீண்ட காலமாக இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia)-வும் ஒன்று. இந்த காரே தற்போது ஒரு லட்சம் யூனிட் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் இக்கார் மாடலை முதன் முதலில் 2001 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு 21 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையிலேயே நீண்ட வருட காலத்திற்கு பின்னர் தற்போது ஒரு லட்சம் யூனிட் விற்பனை என்கிற சாதனையை ஆக்டேவியா எட்டியிருக்கின்றது. ஸ்கோடா நிறுவனம் இக்காரின் பாகங்களை இறக்குமதி செய்து, பின்னர் இந்திய ஆலையில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனைக்கு வழங்குகின்றது. அதாவது, சிகேடி எனும் முறையில் (Completely Knocked Down) ஆக்டேவியாவை ஸ்கோடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

சிகேடி முறையில் கொண்டு வரப்பட்டு விற்பனைச் செய்யப்படும் வாகனங்களிலேயே அதிகம் விற்பனையாகும் கார் எதுவென்றால், அது ஸ்கோடா ஆக்டேவியாதான். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது இக்கார் மாடல் ஒரு லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆக்டேவியாவின் நீண்ட கால வரலாறு:
ஸ்கோடா நிறுவனம் இக்காரை இந்தியாவில் வேண்டுமானால் 2001 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால், 1996 ஆம் ஆண்டே இக்காரை உலகளவில் வெளியீடு செய்துவிட்டது. அதேநேரத்தில், 2001 ஆம் ஆண்டில் வழக்கமான ஆக்டேவியாவை மட்டுமே ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்த சம்பவத்தை நிகழ்த்திய அடுத்த மூன்றாண்டுகளில், அதாவது, 2004 ஆம் ஆண்டில் அக்காரின் ஆர்எஸ் எனும் பெர்ஃபார்மன்ஸ் ரக வெர்ஷனை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. டர்போ பெட்ரோல் எஞ்ஜினுடன் சிறந்த பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தும் முதல் செடான் ரக காராக இதன் வருகை அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, 2005ம் ஆண்டில் இரண்டாம் தலைமுறை ஆக்டேவியாவை நாட்டில் அறிமுகப்படுத்தியது, ஸ்கோடா. அதேநேரத்தில் முதல் தலைமுறை ஆக்டேவியா 2010 வரையில் விற்பனையில் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாம் தலைமுறை ஆக்டேவியா 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதிலும் ஆர்எஸ் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதன் வருகை 2017-லேயே அரங்கேறியது. இதைத்தொடர்ந்து, ஆர்எஸ் 245இன் வருகையையும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் நிகழ்த்தியது. இது 2020இல் அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு பன்முக வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையிலும் இப்போதுதான் ஒரு லட்சம் யூனிட் விற்பனை மைல் கல்லை ஸ்கோடா ஆக்டேவியா எட்டியிருக்கின்றது.

ஸ்கோடா நிறுவனம் வெகுவிரைவில் இக்காரின் பிளக்-இன் ஹைபிரிட் வெர்ஷனை களமிறக்க இருக்கின்றது. இந்த பணியில் நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய இரண்டிலும் இயங்கக் கூடியதே இந்த பிளக்-இன் ஹைபிரிட் வாகனம். ஆக்டேவியா ஆர்எஸ் ஐவி எனும் பெயரில் அது தற்போது உலக சந்தையில் சிலவற்றில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது இந்தியாவில் நான்காம் தலைமுறை ஆக்டேவியா காரே விற்பனையில் இருக்கின்றது. இந்த வாகனத்திற்கு மிக சூப்பரான டிமாண்ட் மக்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே இதன் அறிமுகம் இந்தியாவில் அரங்கேறியது. ரூ. 25.99 லட்சம் தொடங்கி ரூ. 28.99 லட்சம் வரையிலான விலையில் அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








