சென்னை தலைமை செயலகத்தில் பலலட்சம் செலவில் உருவாகும் தரமான வசதி! வருஷ முடிவுக்குள்ளேயே பயன்பாட்டுக்கு வந்திடும்
தலைமை செயலகத்தில் தரமான வசதி ஒன்றை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (Tamil Nadu Energy Development Agency) அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன அது என்பது பற்றிய விரிவான தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் சோலாரால் இயங்கக் கூடிய மின் வாகன சார்ஜிங் மையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை செயலகத்தில் மட்டுமின்றி நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்திலும் சோலார் சார்ஜிங் மையம் அமைய இருக்கின்றது.

இரண்டும் நடப்பாண்டின் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்று. இதற்கான நிதிகள் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (Tamil Nadu Innovation Initiatives) தரப்பில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு மானியம் வழங்குவது தொடங்கி வரி சலுகைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மின் வாகன ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துடன், மின் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கம் பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையிலேயே தமிழக அரசின் இரு முக்கிய அலுவலகங்களில் (தலைமை செயலகம் மற்றும் டிபிஐ வளாகம்) சோலாரால் இயங்கக் கூடிய சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், இதன் வேகத்தை பன் மடங்கு உயர்த்த இதுமாதிரியான முயற்சிகளே தற்போது தேவைப்படுகின்றது. தற்போது பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயாராக உள்ளனர். ஆனால், நாட்டில் போதிய சார்ஜிங் மையங்களின் பற்றாக்குறை பெரியளவில் உள்ளது.

முக்கிய நகரங்களிலேயே இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. தற்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் பல மடங்கு உயர்ந்துக் கொண்டிருப்பதால் விரைவில் சார்ஜிங் மையங்களின் பற்றாக்குறை தலைவிரித்தாட தொடங்கும் என யூகிக்கப்படுகின்றது. அதேநேரத்தில், இந்த நிலைமை ஏற்படாத வண்ணம் இருக்க அரசுகள் இப்போதே முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டன.

இதற்கு சான்றே தமிழக அரசின் இந்த சோலார் சார்ஜிங் மையம். தமிழக அரசு மிக சமீபத்தில் 25 எலெக்ட்ரிக் கார்களை அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக களமிறக்கியது. அனைத்தும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். இதைத்தொடர்ந்து, தற்போது மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலும் அது களமிறங்கியிருக்கின்றது.

தமிழக அரசு இந்த டிபிஐ மற்றும் தலைமை செயலகத்தை தேர்ந்தெடுக்க ஓர் காரணம் இருக்கின்றது. அரசுக்கு சொந்தமான மின்சார வாகனங்கள் அதிகளவில் புழங்கும் பகுதிகளாக இவை இரண்டும் இருப்பதே அந்த காரணம் ஆகும். இந்த சோலார் சார்ஜிங் மையம் 100kW திறனில் இயங்கக் கூடியது.

ஒரே நேரத்தில் 15 எலெக்ட்ரிக் வாகனங்களைக்கூட இங்கு சார்ஜ் செய்ய முடியும். மேலும், சிசிஎஸ் 2 (CCS 2) மற்றும் சடேமோ (ChadeMo) என்கிற இரு விதமான சார்ஜிங் கன்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் வாயிலாக அனைத்து வகையான மின்சார வாகனங்களையும் நம்மால் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

அதாவது, எலெக்ட்ரிக் கார், ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகிய மின்சார வாகனங்களை அதிக-வேகத்தில் மற்றும் குறைந்த வேகம் என்ற திறனில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இத்தகைய பிரமாண்ட வசதியுடனேயே சோலார் சார்ஜிங் மையம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

சென்னையில் ஏற்கனவே சில பகுதிகளில் சார்ஜிள் மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. நந்தனம், அண்ணா கிழக்கு மற்றும் கோயம்பேடு ஆகிய மெட்ரோ ஸ்டேஷன்களிலேயே மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதேபோல், சோலார் சார்ஜிங் மையமும் ஏற்கனவே தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது.

அது இவிகே சம்பத் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் டிபிஐ அலுவலகத்திலேயே இருக்கின்றது. இதன் திறன் 25kW ஆகும். இதுவே தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் சோலார் சார்ஜிங் மையம் ஆகும். இதுமாதிரியான ஓர் சார்ஜிங் மையமே மிக அதிக தொகை செலவில் விரைவில் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அமைய இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








