டட்சனை தொடர்ந்து... இந்தியாவை விட்டு வெளியேறும் முடிவில் உள்ளதா நிஸான்? சிஇஓ பதில்!!
ஜப்பானிய ஆட்டோமொபைல் பிராண்டான நிஸானும் இந்திய சந்தையில் இருந்து விடைபெற்று செல்லவுள்ளதாக சமீப நாட்களாக வதந்திகள் பரவி வந்ததை அடுத்து, இதற்கு நிஸான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதில் அளித்துள்ளார்.

விற்பனையில் பெரிய அளவில் சோபிக்காத நிறுவனங்கள் இந்திய சந்தையை விட்டு சென்றுள்ளதை இதற்குமுன் பார்த்துள்ளோம். கடந்த ஆண்டில் ஃபோர்டு இந்தியாவை விட்டு சென்றது பேசும் பொருளாக மாறியது. இந்த வகையில் சமீபத்தில் கூட டட்சன் பிராண்ட் விடை பெற்று செல்வதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அடுத்த கவனமே நிஸான் மீதுதான் விழுந்தது. ஏனெனில் டட்சன் பிராண்டின் தாய் நிறுவனம் நிஸான் ஆகும். முந்தைய காலங்களில் ஜப்பானை தவிர்த்து வெளிநாடுகளில் தங்களது கார்களை டட்சன் பிராண்டில்தான் நிஸான் நிறுவனம் விற்பனை செய்துவந்தது. இந்தியாவில் கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களாக தயாரிப்புகளை சந்தைப்படுத்திவந்த டட்சன் சந்தைக்கேற்ப விலை குறைவான கார்களையே விற்பனை செய்தது.

இருப்பினும் போதிய விற்பனை இல்லாததால் டட்சன் பிராண்டின் பயணம் நம் நாட்டில் நிறுத்தி கொள்ளப்பட்டது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கு அடுத்து கடைசியாகவே இந்தியாவில் டட்சன் பிராண்டின் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நிஸான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தாவா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "நிஸான் நெக்ஸ்ட் நிறுவனத்தின் உலகளாவிய மாற்ற திட்டத்தின் கீழ், 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாகனம் மேக்னைட் ஆகும். மேலும் அதிக ஆர்வமுள்ள மதிப்பை வழங்குகிறது" என தெரிவித்தவர், நாட்டில் உள்ள டட்சன் கார் வாடிக்கையாளர்களுக்கு திருப்திக்கர உணர்வு கிடைக்கும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

டட்சனை தொடர்ந்து நிஸானும் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக பரவிவரும் வதந்தியை முற்றிலும் மறுத்துள்ள ராகேஷ் வஸ்தாவா, இந்தியாவில் தாங்கள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். உண்மையில், மேக்னைட்டின் அறிமுகத்திற்கு பிறகு நிஸான் பிராண்ட்டிற்கு இந்திய சந்தையில் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கப்பட்டுள்ளது போலவே உள்ளது.

பலத்த போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் மேக்னைட் கடந்த 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களில் மேக்னைட் கார்களின் உற்பத்தி 50 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அதேநேரம், இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது.

நிஸான் மற்றும் அதன் பிரெஞ்சு கார் பிராண்டான ரெனால்ட் இரண்டிற்கும் நமது தமிழகத்தில்தான் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்து மொத்தம் 15 நாடுகளுக்கு பயணிகள் கார்களை நிஸான் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.

இருப்பினும் உள்நாட்டு மொத்த பயணிகள் கார்கள் விற்பனையில் நிஸானின் பங்கு 1%-க்கும் குறைவானதாகவே உள்ளது. மற்ற நிறுவனங்களை போல் நிஸானும் அடுத்ததாக மேக்னைட்டின் 7-இருக்கை வெர்சனை அறிமுகம் செய்ய பார்க்கலாம். எங்களது கூற்றுப்படி, மேக்னைட் 7-இருக்கை வெர்சன் வெளிவந்தாலும், அதன் தோற்றத்தில் பெரியதாக வித்தியாசம் இருக்காது என்றே நினைக்கிறோம்.

கூட்டணி கொள்கையின்படி, ரெனால்ட் கிகரின் இயக்குத்தளத்தில்தான் நிஸான் மேக்னைட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிகரில் இருந்து வேறுப்பட்டு தெரியவும், விற்பனையை பெருக்கி கொள்ளவும் புதிய 7-இருக்கை மேக்னைட் மாடல் நிஸானுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த புதிய நிஸான் தயாரிப்புக்கு ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் 7-இருக்கை மாடல் போட்டியாக விளங்கும்.ரெனால்ட் பிராண்டில் டிரைபர் எம்பிவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரெனால்ட் டிரைபரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.76 லட்சம் - ரூ.8.32 லட்சமாக உள்ளது. மொத்தம் 10 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டிரைபரில் பிஎஸ்6-க்கு இணக்கமான 999சிசி என்ஜின் மற்றும் மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்தியாவில் நிஸான் பிராண்டில் இருந்து எந்தவொரு எம்பிவி காரும் தற்போதைக்கு விற்பனையில் இல்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், விற்பனையில் இருப்பது வெறும் 3 மாடல்கள் மட்டுமே.


Click it and Unblock the Notifications








