பிரதமர் மோடி முன்னிலையில் சுஸுகியின் ரூ.10,440 கோடி முதலீடு!! குஜராத்தில் புதிய இவி தொழிற்சாலை....
ரூ.10,440 கோடி முதலீட்டு தொகையுடன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தனது முதல் அடியை மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்து வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்பிரேஷன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் சுமார் 150 பில்லியன் யென் (இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.10,440 கோடி)-ஐ முதலீடு செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டு தொகையில் இந்தியாவில், குஜராத் மாநிலத்தில் இவி பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ சுஸுகி திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த மாநிலத்தில் வாகன மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றினையும் கட்டமைக்க இந்த ஜப்பானிய நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த மார்ச் 19ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள இந்திய-ஜப்பானிய பொருளாதார மன்றத்தில் குஜராத் அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலின் போது ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சுஸுகி மோட்டார் கார்பிரேஷனின் பிரதிநிதி இயக்குனரும், தலைவருமான டோஷிஹிரோ சுஸுகி, "சிறிய அளவிலான கார்களுடன் கார்பன் நடுநிலையை அடைவதை சுஸுகி எதிர்கால திட்டமாக கொண்டுள்ளது. சுயசார்பு இந்தியாவை (அட்மா-நிர்பர் பாரத்) கொண்டுவருவதற்காக நாங்கள் தொடர்ந்து முதலீடுகளை செய்வோம்" என்றார்.

150 பில்லியன் யென் என்பது மிக பெரிய முதலீடு ஆகும். ஆதலால் இது சுஸுகியின் இந்திய பிரிவின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான திட்டங்களின் மிக முக்கிய தடமாக கருதப்படுகிறது. இத்தகைய மிக பெரிய முதலீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், இந்தியாவில் சுஸுகியின் எலக்ட்ரிக் வாகன அறிமுக காலவரிசையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இந்திய சந்தையில் மாருதி உடன் இணைந்து செயல்பட்டுவரும் சுஸுகி தனது முதலாவது எலக்ட்ரிக் வாகனத்தை வருகிற 2025இல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால், திட்டமிட்டப்படி மாருதி சுஸுகியின் முதலாவது எலக்ட்ரிக் வாகனம் 2025இல் அறிமுகப்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் நிலவி வந்தது. அது தற்போது இந்த முதலீட்டு அறிவிப்பின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட ரூ.10,440 கோடி முதலீட்டு தொகையில் கிட்டத்தட்ட ரூ.7,300 கோடி ஆனது பேட்டரி தொழிற்சாலையை புதியதாக கட்டமைக்கவே செலவிடப்பட உள்ளது.

குஜராத்தில் இந்த தொழிற்சாலை ஆனது தற்போதைய ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு அருகே 2026க்குள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மீதி ரூ.3,140 கோடி 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கான சுஸுகி எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைக்கவும், அவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது. ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான சுஸுகியும், டொயோட்டாவும் கூட்டணியில் இருப்பது நமக்கு தெரிந்த விஷயமே.

இந்தியாவில் மாருதி சுஸுகியும், டொயோட்டாவும் கடந்த 2019 நவம்பரில் கூட்டணி சேர்வதாக அறிவித்தன. இந்த கூட்டணியின் விளைவாக, தலைநகர் டெல்லிக்கு அருகே உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வாகன அழித்தல் & மறுசுழற்சிக்கான தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே இறங்கிவிட்டன. இவற்றை தொடர்ந்து மாருதி சுஸுகியும் மிக விரைவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2020இல் தனது எலக்ட்ரிக் வாகன அறிமுகங்களை தாமதப்படுத்தி கொள்வதாக மாருதி சுஸுகி அதிரடியாக அறிவித்தது. இதற்கு அந்த சமயத்தில் தீவிரமாக பரவிவந்த கொரோனா வைரஸ் ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் போதிய கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உதவிகள் இல்லாததை காரணமாக மாருதி சுஸுகி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை ஓரளவிற்கு சீராகி உள்ளதாலும், மற்ற பிராண்ட்கள் இவி தயாரிப்பில் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்துள்ளதினாலும், இந்தியாவில் கட்டமைப்பை உருவாக்கி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்க மாருதி சுஸுகி ஒருவழியாக தயாராகிவிட்டது. இதன் வெளிப்பாடே இந்த ரூ.10,440 முதலீடு ஆகும். மொத்தமாக இந்தியாவில் அடுத்த 5 வருடங்களில் சுமார் ரூ.4,20,000 கோடியை முதலீடு செய்ய சுஸுகி மோட்டார் கார்பிரேஷன் திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பும் கடந்த மார்ச் 19ஆம் தேதி பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் கிஷிடாவின் முன்னிலையில் வெளிவந்தது. இதன் மூலம் தற்போதைய இந்தியாவின் நம்பர்.1 கார் பிராண்ட் என்கிற நிலையை எலக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் கொண்டு செல்ல மாருதி சுஸுகி விரும்புவது தெளிவாகிறது. இதற்கான எதிர்கால திட்டங்கள் இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனத்திடம் எந்த அளவிற்கு உள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








