ஒரு முறை சார்ஜ் போட்டால் 1260 கி.மீ போகலாம்! புதுசா ஒரு பேட்டரி கண்டுபிடிப்பு! விலையும் ரொம்ப கம்மி!
எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிக்கு மாற்றாக கடல் உப்பு பேட்டரியை ஆய்வாளர்கள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர். இது லித்தியம் அயான் பேட்டரியை விட 4 மடங்கு அதிக திறன் கொண்டதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இன்று எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. பலர் எலெக்ட்ரிக் கார்களை வாங்க விரும்புகின்றனர். இருந்தாலும் மக்கள் பெட்ரோல், டீசல் கார்களை கைவிட்டுவிட்டு எலெக்ட்ரிக் காருக்கு செல்ல வேண்டும் என்றால் பெரியதாக யோசிக்கின்றனர். இதற்கு 2 முக்கியமான காரணம் இருக்கிறது ஒன்று எலெக்ட்ரிக் கார்களின் விலை இது பெட்ரோல், டீசல் இன்ஜின் காரின் விலையை விட அதிகமாக இருக்கிறது.

மற்றொரு பிரச்சனை ரேஞ்ச் முழு பேட்டரியை சார்ஜ் செய்தாலும் குறைவான தூரத்தையே கடக்க முடிகிறது. இதனால் நீண்ட தூரம் பயண திட்டத்திற்கு எலெக்ட்ரிக் கார் ஒத்து வராது என மக்கள் கருதுகின்றனர். செல்லும் வழியில் சார்ஜ் ஏற்றி ஏற்றிச் செல்லலாம் என்றாலும் இந்தியாவில் போதுமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை. இதனால் மக்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தயக்கமும் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தற்போது குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக டாடா டியாகோ இவி கார் இருக்கிறது.
டாடா டியாகோ இவி காரின் விலை குறைந்த பட்சம் ரூ8.49 லட்சமாகும், இந்த காரின் அதிகபட்ச ரேஞ்ச் 315 கி.மீ தான். ஆனால் இந்த ரேஞ்ச் தரும் வேரியன்ட்டின் விலை ரூ10.79 லட்சமாகும். எலெக்ட்ரிக் காருக்கான அதிக விலை மற்றும் குறைவான ரேஞ்ச்சிற்கு அதன் பேட்டரியே காரணம். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பவர் வழங்கும் திறன் கொண்ட பேட்டரி என்றால் லித்தியம் அயான் பேட்டரிகள் தான்.
இன்று பெரும்பாலானா எலெக்ட்ரிக் வாகனங்களில் இந்த பேட்டரி தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரியின் விலை அதிகம் என்பதால் எலெக்ட்ரிக் காரின் விலையும் அதிகமாகிறது. ஆனால் இந்த பேட்டரிக்கு மாற்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் சில கடல் தண்ணீரிலிருந்து உப்பை எடுத்து பேட்டரி தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த கடல் நீர் உப்பால் செய்யப்பட்ட பேட்டரி லித்தியம் அயான் பேட்டரிக்கு மாற்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த பேட்டரியை " ஸீ சால்ட் பேட்டரி " அல்லது "சோடியம் சல்ஃபர் பேட்டரி" என அழைக்கின்றனர்.இந்த பேட்டரி முழுவதும் சோடியம் சல்ஃபர் என்ற மூலப்பொருட்களால் செய்யப்பட்டது. இந்த ஆய்வின் தலைவர் டாக்டர் ஷென்லாங் ஸாவோ இது குறித்துக் கூறும்போது இது லித்தியம் அயான் பேட்டரியை விட 4 மடங்கு அதிக திறன் கொண்டது என கூறியுள்ளார்.
இந்த பேட்டரி மார்கெட்டிற்கு வந்தால் மிகப்பெரிய அளவிற்கு பெரும் புரட்சியே ஏற்படும் என தெரிகிறது. இந்த பேட்டரியை தயாரிப்பதற்கான செலவும் மிகவும் குறைவுதான். கடல் நீர் உப்பு தான் இதற்கு மூலப்பொருள் என்பதால் இதற்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை. அதனால் வரும்காலத்தில் லித்தியம் அயான் பேட்டரிக்கு பதில் எலெக்ட்ரிக் கார்களில் சோடியம் சல்ஃபர் பேட்டரிகள் பொருத்தப்பட்டால் அதன் பின் எலெக்ட்ரிக் வாகனங்களில் விலையும் பாதியாக குறையும். ரேஞ்ச்சும் 4 மடங்கு வரை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
உதாரணமாக இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக விற்பனையாகும் டாடா டியாகோ காரில் 315 கி.மீ ரேஞ்ச் தரும் வேரியன்டில் லித்தியம் அயான் பேட்டரிக்கு பதிலாக இந்த பேட்டரியை பயன்படுத்தினால் இந்த கார் முழு சார்ஜில் 1260 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக மாறும். இதுமட்டுமல்ல இந்த காரின் விலையும் ரூ5.39 லட்சமாக மாறும். இந்த பேட்டரி மட்டும் மார்கெட்டிற்கு வந்தால் பெட்ரோல் டீசல் கார்களை யாரும் விரும்ப மாட்டார்கள். எலெக்ட்ரிக் காரில் இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும்.


Click it and Unblock the Notifications








