இவ்ளோ பெரிய ஆர்டர் சாதாரண விஷயம் இல்ல... டாடா நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... என்னனு தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஒன்று அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

250 எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. அவுரங்காபாத் மிஷன் க்ரின் மொபிலிட்டிக்காக (Aurangabad Mission Green Mobility - AMGM) இந்த 250 எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

175 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் 75 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் என ஒட்டுமொத்தமாக 250 டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 250 எலெக்ட்ரிக் கார்கள் என்பது மிகப்பெரிய ஆர்டர் ஆகும். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த 250 கார்களையும் 2 பகுதிகளாக டெலிவரி செய்யவுள்ளது.

முதல் பகுதியில் ஒட்டுமொத்தமாக 101 எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி செய்யப்படும். இதில், 70 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களும், 31 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்களும் அடங்கும். எஞ்சிய கார்கள் இரண்டாவது பகுதியில் டெலிவரி செய்யப்படும். தற்போதைய நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் திகழ்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில், கிட்டத்தட்ட 87 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற டயர் 1 நகரங்களில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருவதுதான் இதற்கு காரணம். தற்போதைய நிலையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் ஆகும். தினசரி நகர பயன்பாடுகளுக்கும், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் வெளியூர் பயணங்களுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் சிறந்த தேர்வாக விளங்குகிறது.

இந்த சூழலில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் அதிக ரேஞ்ச் வழங்க கூடிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது திட்டமிட்டு வருகிறது. புதிதாக விற்பனைக்கு வரவுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடலில், தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அனேகமாக 40kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய பேட்டரி தொகுப்பு உள்ளிட்ட காரணங்களால், புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் எடை சுமார் 100 கிலோ வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இந்த புதிய மாடலின் ரேஞ்ச் அதிகமாக இருக்கும்.

இந்த புதிய மாடலின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 400 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.54 லட்ச ரூபாயாக உள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.15 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஆனால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடலின் விலை இதைக்காட்டிலும் அதிகமாக இருக்கலாம். பெரிய பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதுதான் இதற்கான முக்கிய காரணம். இதுதவிர புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேறு ஒரு சில வசதிகளையும் கூடுதலாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் தவிர, தற்போது விற்பனையில் இருந்து வரும் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களும் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒருவேளை டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் வேண்டுமானால் தாமதம் ஆகலாம். இருப்பினும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலாவது டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








