அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றி இந்திய கொடியை பறக்க விட்ட டாடா! சினிமால கூட இந்த அளவுக்கு மாஸ் சீன் இருக்காது!
உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு (Ford). அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலும் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது. ஆனால் இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எனவே ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது.
ஃபோர்டு நிறுவனத்திற்கு குஜராத் மாநிலம் சனந்த் (Sanand) பகுதியில் கார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையை கையகப்படுத்தும் (Acquisition) பணிகளை இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது நிறைவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (Tata Passenger Electric Mobility Limited - TPEML) நிறுவனம்தான்,ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளது.

இதற்காக 725.7 கோடி ரூபாயை டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் செலவிட்டுள்ளது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலை தற்போது முழுமையாக டாடா வசம் வந்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையின் ஒட்டுமொத்த நிலம், கட்டிடங்கள், கார் உற்பத்திக்கான உபகரணங்கள் என அனைத்தும் இனி டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்திற்குதான் சொந்தம். அத்துடன் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிலாளர்களையும் டாடா கைவிடவில்லை.
ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தகுதியுடைய தொழிலாளர்கள் அனைவரும் இனி டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள். ஃபோர்டு நிறுவனம் அவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகள் அனைத்தையும் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனமும் வழங்கும். இதன் காரணமாக எதிர்காலம் கேள்விக்குறி என்ற இக்கட்டான நிலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தற்போது மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர்.
ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையை முழுமையாக கைப்பற்றியிருப்பதன் மூலம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வருடாந்திர கார் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளது. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் ஒரு வருடத்திற்கு 3 லட்சம் கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய இயலும். ஆனால் ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையை கையகப்படுத்தியுள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இனி ஒரு ஆண்டுக்கு 4.20 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இயலும்.
எலெக்ட்ரிக் கார்கள் என வந்து விட்டால், தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்திய சந்தையின் முடிசூடா மன்னனாக திகழ்கிறது. எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையிலும் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. தற்போதைய நிலையில் டிகோர் (Tigor), டியாகோ (Tiago), பன்ச் (Punch), அல்ட்ராஸ் (Altroz), நெக்ஸான் (Nexon), ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) உள்ளிட்ட கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இதில், டிகோர், டியாகோ மற்றும் நெக்ஸான் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது. அதே நேரத்தில் பன்ச் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை உருவாக்கும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு களமிறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையை முழுமையாக கைப்பற்றியிருப்பது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் தனது கார்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை, இந்த தொழிற்சாலையின் மூலம் பூர்த்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் மாருதி (Maruti) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகிய நிறுவனங்களுக்கு எல்லாம் டாடா மோட்டார்ஸ் கடுமையான சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








