இம்மாம் பெரிய டிரக் மோதியும் காருக்கு பெருசா ஒன்னுமே ஆகல... தயாரிச்சது யாரு?.. நம்ம டாடாவாச்சே!
டாடா காருடன் மோதிய டிரக் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா (Tata) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான கார் மாடல்களில் ஹாரியர் (Harrier)-ம் ஒன்று. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலாகும். இந்த காரும், ஓர் லாரியுமே தற்போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இந்த விபத்தில் லாரியின் முகப்பு பகுதி முற்றிலுமாக சிதைந்து பெருத்த சேதத்தைச் சந்தித்திருக்கின்றது.

இந்த லாரி சிதைந்திருப்பதை பார்க்கையில், இதனுடன் விபத்தைச் சந்தித்த வாகனம் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் என்றே நம்மில் பலர் நினைப்பர். ஆனால், இந்த எண்ணத்தை உடைத்தெறியும் வகையில் விபத்தான கார் குறித்த படங்கள் வெளியாகியுள்ளன. ஆமாங்க, விபத்தைச் சந்தித்த டாடா ஹாரியர் கார் பெரியளவில் சேதத்தைச் சந்திக்கவில்லை. கணிசமான அளவிலேயே பாதிப்பை சந்தித்திருக்கின்றது.

இதன் வாயிலாக டாடா நிறுவனத்தின் இந்த தயாரிப்பு மிகவும் உறுதியானது என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், காருக்குள் இருந்தவர்களுக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக சிறு சிறு சிராய்ப்புகளுடன் அவர்கள் தப்பித்திருக்கின்றனர். இந்த விபத்திற்கு விலங்கு ஒன்று குறுக்கே வந்ததே காரணம் என கூறப்படுகின்றது.

வழியில் குறுக்கிட்ட விலங்கை காப்பாற்றுவதற்காக முன்னால் சென்றுக் கொண்டிருந்த டிரக் ஒன்று திடீரென பிரேக்கை போட்டு நிறுத்தியிருக்கின்றது. இதை சற்றும் எதிர்பார்த்திராத ஹாரியர் கார் ஓட்டுநர் விபத்தைத் தவிர்க்கும் விதமாக காரை நிறுத்தியிருக்கின்றார். ஆனால், இதற்கும் பின்னால் வந்த டிரக் சற்று எதிர்பாராத நேரத்தில் ஹாரியர் மோதி விபத்திற்குள்ளானது.

விபத்து ஏற்பட்ட உடனேயே சம்பவ இடத்தில் இருந்து லாரி ஓட்டுநர் தப்பத்திருக்கின்றார். தன் மீதிருக்கும் தவற்றை உணர்ந்து அவர் அங்கிருந்து தப்பித்திருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. அதேநேரத்தில், இந்த சம்பவத்தில் நாம் கவனிக்க வேண்டியது இடத்தில் டாடா ஹாரியர் காரின் அதிக உறுதித் தன்மை இருக்கின்றது. தற்போது அதிக முரட்டுத் தனமான தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக டாடா ஹாரியர் இருக்கின்றது.

இந்த கார் இப்போது வரை குளோபல் என்சிஏபியால் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. அப்படியே இக்காரின் பாதுகாப்பு தரம் குறித்து ஆய்வு செய்யும் வகையில் கிராஷ் டெஸ்ட் செய்யப்படுமானால் அந்த ஆய்வில் மிக சிறந்த மதிப்பெண்களை அது பெறும் என்பதை தற்போதைய விபத்து நிகழ்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை குவிப்பதற்கான வாய்ப்புகள்கூட இருப்பதை இந்த நிகழ்வு நமக்கு உறுதிப்படுத்துகின்றது.

இதற்கு முன்னதாகவும் இந்த கார் விபத்து நிகழ்வைச் சந்தித்திருக்கின்றது. அப்போதும்கூட இந்த வாகனம் அதன் அதிக உறுதியான கட்டமைப்பை உறுதிப்படுத்தியது. ஹாரியர் எஸ்யூவி தற்போது டீசல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 2.0 லிட்டர் கைரோடெக் எஞ்ஜினில் மட்டுமே ஹாரியர் எஸ்யூவி கிடைக்கிறது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது இந்தியாவில் எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.

டாடா காரில் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கன்றன. 6 ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, டிராக்சன் கன்ட்ரோல், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மல்டிபிள் டிரைவ் மோட், பிரேக் டிஸ்க் வைப்பிங் கருவி, க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ரோல் ஓவர் மிடிகேஷன், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








