சுமார் ரூ.1,451 கோடி வருவாய் இழப்புடன் டாடா மோட்டார்ஸ்!! 2022 பட்ஜெட்டை தான் பெரிசா நம்பியிருக்கு!
2019ஆம் ஆண்டில் இருந்தே இந்திய ஆட்டோமொபைல் துறை பலவித ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்து வருகிறது. ஏற்றங்களை காட்டிலும் இறக்கங்களே அதிகளவில் நிகழ்ந்துள்ளன என்று சொல்ல வேண்டும்.

2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து தற்போது வரையில் கொரோனா வைரஸ் பரவல்களால் அவ்வப்போது கொண்டுவரப்படும் ஊரடங்குகள் தொழிற்சாலை பணிகளை சற்று தாமதப்படுத்துகின்றன என்றால், மறுப்பக்கம் பாகங்கள் விநியோக போக்குவரத்துகளுக்கு பெரிய அளவில் தடையாக அமைகின்றன.

இதற்கிடையில் உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை ஒரு பக்கம் ஆட்டோமொபைல் நிறுவனங்களை பதம் பார்த்து வருகின்றன. இத்தகைய இடையூறுகளினால், கடந்த 2021 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுற்ற நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட ரூ.1,451 கோடி அளவில் ஒருங்கிணைந்த நிகர இழப்பை அடைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

அதுவே, 2020-21ஆம் நிதியாண்டின் இதே 3ஆம் காலாண்டில் சுமார் ரூ.2,941 கோடி நிகர இலாபத்தை டாடா மோட்டார்ஸ் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2021-22இன் மூன்றாம் காலாண்டில் இந்த நிறுவனம் பெற்றுள்ள மொத்த வருவாய் ரூ.72,229 கோடியாகும். ஆனால் 2020இன் இதே காலக்கட்டத்தில் ரூ.75,653 கோடி வருவாயை டாடா மோட்டார்ஸ் ஈட்டி இருந்தது.

இருப்பினும் தனியாக டாடா மோட்டார்ஸ் மட்டும் ரூ.175.85 கோடி இலாபத்தை 2021 அக்டோபர்- டிசம்பர் காலக்கட்டத்தில் கண்டுள்ளது. ஆனால் 2020-21 நிதியாண்டில் இந்த 3 மாதங்களில் ரூ.638.04 கோடி மதிப்பில் நஷ்டத்தை டாடா மோட்டார்ஸ் தனியாக அடைந்திருந்தது. இந்த ஆட்டோமொபைல் நிறுவனம், செயல்பாடுகளின் மூலம் பெற்றுள்ள வருவாய் ரூ.12,352.78 கோடியாகும்.

இதற்கு முந்தைய ஆண்டில் ரூ.9,635.78 கோடியை மட்டுமே இந்த வகையில் வருவாயாக டாடா மோட்டார்ஸ் ஈட்டி இருந்தது. டாடா மோட்டார்ஸின் பிரீமியம் துணை பிராண்டாக விளங்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் கடந்த மூன்றாம் காலாண்டில் 37.6 சதவீத நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. இருப்பினும் ஜே.எல்.ஆர் -இன் தயாரிப்பு முந்தைய ஆண்டை காட்டிலும் கிட்டத்தட்ட 41% அதிகரித்துள்ளது.

இவ்வாறான வருவாய் இழப்புகளுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைக்கடத்திகளுக்கு உலகளவில் நிலவிவரும் பற்றாக்குறையையும், தொடர்ந்து அதிகரித்து வரும் வாகன பாகங்களின் விலைகளையுமே காரணங்களாக சுட்டிக்காட்டி உள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "குறைக்கடத்தி பற்றாக்குறை 2022வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் விநியோக தளத்தின் திறன் அதிகரிக்கும்போது படிப்படியாக இந்த பற்றாக்குறை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது. அதாவது குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் குறிப்பிட்ட காலத்திற்குள் வாகனங்களை தயாரிக்க முடியாமல் போகிறது. இதன் விளைவாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் டெலிவிரிக்காக நீண்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

இதுவே நடப்பு 2021-22 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் தங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் கருதுகிறது. இதனை சரி செய்ய வேண்டுமெனில், முன்கூட்டியே வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு பாகங்கள் விநியோக தளத்தினை மேம்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்கிறது இந்த இந்திய முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம்.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது பங்கிற்கு முதல்-தர விநியோகிப்பாளர்களிடமும், சிப் தயாரிப்பு நிறுவனங்களிடமும் நீண்ட கால விநியோகத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் குறிப்பிடத்தக்க இலாபகரமான வருவாயை கே.எல்.ஆர் பெறும் என்கிற நம்பிக்கையில் டாடா மோட்டார்ஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications