இந்த தகவல் நம்மையே டாடா எலெக்ட்ரிக் கார வாங்க வச்சுடும் போல! 10000 மின்சார கார்களை வழங்க ஆர்டர் கெடச்சிருக்கு!
டாடா மோட்டார்ஸுக்கு மற்றுமொரு பெரிய ஆர்டர் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் தனி நபர் பயணிகள் வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக மிக சூப்பரான டிமாண்ட் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ஒட்டுமொத்த இந்திய மின் வாகன சந்தையில் 87 சதவீத பங்கை டாடா மோட்டார்ஸ் பிடித்திருக்கின்றது. ஆம், இப்போதே 25 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் மின்சார வாகனத்தை டாடா விற்பனைச் செய்திருக்கின்றது. இந்தளவிற்கு மிக சிறப்பான வரவேற்பு டாடா தயாரிக்கும் மின் வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலில் 10 ஆயிரம் எக்ஸ்பிரஸ் டி எலெக்ட்ரிக் கார்களை பிரபல தனியார் நிறுவனமான ப்ளூஸ்மார்ட் எலெக்ட்ரிக் மொபிலிட்டிக்கு வழங்குவதற்கான ஆர்டர் டாடாவிற்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வாகன பிரிவில் எக்ஸ்பிரஸ்-டி இவி (XPRES-T EV) எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இந்த வாகனத்திற்கே மிகப் பெரிய ஆர்டரை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் தற்போது வழங்கியிருக்கின்றது. இதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் இதேபோல் ஓர் மிகப் பெரிய ஆர்டரை வழங்கியது. அப்போது சுமார் 3,500 யூனிட் இதே எக்ஸ்பிரஸ்-டி இவி மின்சார கார்களுக்கான ஆர்டரை அது வழங்கியது. இதுவே இந்த பிரிவில் கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய ஆர்டராக காட்சியளித்தது. ஆனால், இதனை முறியடிக்கும் வகையில் தற்போது 10 ஆயிரம் யூனிட்டுகளுக்கான ஆர்டரை ப்ளூஸ்மார்ட் தற்போது டாடா மோட்டார்ஸுக்கு வழங்கியுள்ளது.

டாடா நிறுவனம் எக்ஸ்பிரஸ் டி இவி எலெக்ட்ரிக் காரில் 72 V 3-Phase ஏசி இன்டக்சன் மின் மோட்டாரை பயன்படுத்தியுள்ளது. இது 30 kW பவரை 4,500 ஆர்பிஎம்மிலும், 105 என்எம் டார்க்கை 2,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இத்தகைய திறன் வாய்ந்த மின் மோட்டாருக்கு தேவையான மின்சார திறனை வழங்க 21.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 213 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதை முழுமையாக சார்ஜ் செய்ய 11.5 மணி நேரங்கள் தேவைப்படும். அதுவே 15 kW ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தோமேயானால் 110 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இக்காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். இக்காரில் பாதுகாப்பான பிரேக்கிங்கை வழங்கும் விதமாக முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இக்காரை அலங்கரிக்கும் விதமாக மிக ஸ்டைலான அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவி எனும் பேட்ஜ் மற்றும் சார்ஜிங் பாயிண்டை கொண்ட கவர்ச்சிகரமான கிரில், எல்இடி லைட்டுகள், கூபே ரக தோற்றம், அதிக சொகுசான இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதுமாதிரியான சூப்பரான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காருக்கே ப்ளூஸ்மார்ட் நிறுவனம் மிகப் பெரிய ஆர்டரை வழங்கியிருக்கின்றது.

இவ்வளவு சூப்பரான எலெக்ட்ரிக் காரையே வர்த்தக வாகன பிரிவில் மட்டும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அதாவது, கால் டாக்சி மற்றும் பிற பொது சேவையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மட்டும் எக்ஸ்பிரஸ் டி இவி மின்சார காரை டாடா விற்பனைக்கு வழங்கி வருகின்றது. டாடா நிறுவனம் முதலில் இந்த பிரிவிலேயே எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது விற்பனைக்கு வந்தபோது, பலர் தனி நபர் பயன்பாட்டிற்கு இந்த வாகனத்தை எப்போது டாடா விற்பனைக்குக் கொண்டும் வரும் என எண்ண வைத்தது. அந்தளவிற்கு பலரின் கவனத்தை இக்கார் ஈர்த்தது.

இந்த நிலையிலேயே நீண்ட மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் தனது முதல் தனி நபர் பயணிகள் மின்சார காராக நெக்ஸான் இவி-யை டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது இக்கார் உட்பட டிகோர் இவி மற்றும் அதிகம் ரேஞ்ஜ் தரும் நெக்ஸான் இவி மேக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகன மாடல்களை டாடா விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுமட்டுமின்றி, தனது பிரபல மினி லோடு வேனான ஏஸ்-ஐயும் அது எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டாடா மோட்டார்ஸுக்கு இதுபோன்று மிகப் பெரிய ஆர்டர் கிடைப்பது முதல் முறையல்ல. முன்னதாக நிறுவனத்தின் மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக சிஇஎஸ்எல் (Convergence Energy Services Ltd) மிகப் பெரிய ஆர்டரை டாடாவிற்கு வழங்கியது. 5,450 எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான ஆர்டரையே சிஇஎஸ்எல் வழங்கியது. இதன் மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடி ஆகும். இதைத்தொடர்ந்தே, தற்போது மீண்டும் மிகப் பெரிய ஆர்டரைப் பெற்று இந்திய வாகனச் சந்தையை டாடா ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








