கைமாறும் ஃபோர்டின் சனந்த் தொழிற்சாலை!! ரூ.1100 கோடி வரையில் செலவு செய்து வாங்கும் டாடா மோட்டார்ஸ்!
ஃபோர்டின் தொழிற்சாலையை சொந்தமாக்குவதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு போதிய விற்பனையின்மை காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறவுள்ளதாக கடந்த ஆண்டில் அறிவித்தது ஆட்டோமொபைல் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன்படி குஜராத் மற்றும் சென்னையில் உள்ள ஃபோர்டின் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பணிகள் ஒவ்வொரு கட்டமாக நிறுத்தி கொள்ளப்பட்டன.

அதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள இந்த 2 தொழிற்சாலைகளில் குஜராத், சனந்த் தொழிற்சாலையை விற்கும் முடிவுக்கு ஃபோர்டு வந்தது. இதற்காக குஜராத் மாநில அரசின் உதவியையும் ஃபோர்டு நாடியது. ஃபோர்டின் சனந்த் தொழிற்சாலையை இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான டாடா மோட்டார்ஸ் வாங்கவே பெரிதும் வாய்ப்புள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம்.

ஏனெனில் குஜராத்தின் சனந்த் பகுதியில் டாடா நிறுவனத்திற்கும் ஒரு தொழிற்சாலை உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், சனந்த் பகுதியில் டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலையையும், ஃபோர்டு தொழிற்சாலையையும் ஒரு சாலை மட்டுமே பிரிக்கிறது. ஆதலால் தனக்கு எதிரே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை டாடா வாங்குவது அந்த நிறுவனத்திற்கு எல்லா விதங்களிலும் சரியான முடிவாக இருக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது ஃபோர்டு, குஜராத் மாநில அரசு மற்றும் டாடா மோட்டார்ஸுக்கு இடையே இந்த வாரத்தில் கையெழுத்தாக உள்ளதாம். இவ்வளவு ஏன், இன்று (மே 30ஆம் தேதி)-யே கூட கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது. வரி சலுகைகளை பெறுதல் மற்றும் வேலை வாய்ப்புகளை தக்க வைத்தல் உள்ளிட்ட இந்த ஃபோர்டு தொழிற்சாலையின் இறுதிக்கட்ட ஒப்பந்தங்கள் இன்னும் 4 முதல் 8 வாரங்களுக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தொழிற்சாலைக்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 100 - 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.775 கோடி - ரூ.1,163 கோடி) வரையில் வழங்கவுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய தொழிற்சாலை டாடா மோட்டார்ஸின் உற்பத்தியை பெருக்க பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஈக்கோஸ்போர்ட் மாடலை தவிர்த்து கடந்த சில வருடங்களாக ஃபோர்டு பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் பெரியதாக எந்த காரும் அதிகளவில் விற்பனையாகவில்லை. இந்தியாவை வெளிநாட்டு சந்தைகளுக்கான கார்கள் உற்பத்தி மையமாகவே ஃபோர்டு பயன்படுத்தி வந்தது. இதில் இந்த சனந்த் தொழிற்சாலையின் பங்கு மிக முக்கியமானது ஆகும். இங்கு தயாரிக்கப்பட்ட பெரும்பாலான ஃபோர்டு கார்கள் வெளிநாடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தொழிற்சாலையை வாங்கிய பின் டாடா நிறுவனம் எவ்வாறு உபயோகிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ அதன் எரிபொருள் என்ஜின் 2-வீலர்களை சாகான் தொழிற்சாலையில் தயாரித்துவர, இனி வரும் காலங்களில் அறிமுகப்படுத்த உள்ள எலக்ட்ரிக் வாகனங்களுக்காக புதியதாக ஒரு தொழிற்சாலையை நிறுவி வருகிறது.

இதேபோல் டாடா நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்களுக்காகவே இந்த தொழிற்சாலையை பயன்படுத்தக்கூடும். டாடா மோட்டார்ஸின் உற்பத்தி திறன் இப்போதைக்கு மாதத்திற்கு 50,000 யூனிட்கள் என்ற அளவில் உள்ளது. அதாவது வருடத்திற்கு 6 லட்ச யூனிட்கள். டீலர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, நடப்பு காலாண்டர் ஆண்டில் குறைந்தப்பட்சம் 5.5 லட்ச கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஃபோர்டின் சனந்த் தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு 3 லட்ச கார்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டது. இந்த தொழிற்சாலையில் ஃபோர்டு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் முதலீடு செய்திருக்கிறது. வெளியேறும் அறிவிப்பு வெளிவரும் வரை இந்த ஃபோர்டு தொழிற்சாலையில் மொத்தம் 1,400 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்கீழ் செயல்பட உள்ளனர்.


Click it and Unblock the Notifications








