டாடா கொடி பறக்குதா! உலகமே இந்தியாவை அண்ணாந்து பாக்குது! மத்தவங்க எல்லாம் ஓரமா போய் விளையாடுங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அடித்து கொள்ள ஆளே இல்லை. எதிர்காலத்தை முன் கூட்டியே கணித்து, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதே தனி ஆவர்த்தனம் செய்ய தொடங்கி விட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அளவிற்கு இங்கு வேறு யாராலும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடியவில்லை.

இந்த சூழலில் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி என்பதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்திருக்கும் அந்த புதிய மைல்கல். இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்திருப்பது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் காராக உற்பத்தி செய்திருப்பது, வெள்ளை நிற டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) கார் ஆகும்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தொழிற்சாலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலில், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை (Tata Nexon EV) மட்டும்தான் விற்பனை செய்து வந்தது.

இதன்பின் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், புதிய மாடல் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற பெயரில், கடந்த மே மாதம்தான் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெரிய பேட்டரி மற்றும் அதிக டிரைவிங் ரேஞ்ச் போன்ற சிறப்பம்சங்களுடன் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

இதை தொடர்ந்து டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை (Tata Tiago EV) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையின் ராஜா என்னும் மகுடத்தை தக்க வைத்து கொள்வதற்காக வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டங்களை வகுத்துள்ளது. இதில், டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV), டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV), டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் (Tata Avinya EV), டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார் (Tata Curvv EV) ஆகியவை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டும்தான். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காருடைய டாப் வேரியண்ட்டின் விலை 11.79 லட்ச ரூபாயாக உள்ளது.

மறுபக்கம் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.64 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. அதே நேரத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.99 லட்ச ரூபாய் ஆகவும், இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.50 லட்ச ரூபாய் ஆகவும் இருந்து வருகிறது.

அதே சமயம் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.34 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 20.04 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இப்படி பல்வேறு விலைகளில், பல்வேறு செக்மெண்ட்களை சேர்ந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று.

இதன் மூலமாக எலெக்ட்ரிக் கார் சந்தையில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் கவர முடிகிறது. எலெக்ட்ரிக் மட்டுமல்லாது, சிஎன்ஜி கார்கள் மீதும் டாடா மோட்டார்ஸ் தற்போது தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெக்ஸான் காரின் சிஎன்ஜி வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஒரு சமயத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. சீனா போன்ற நாடுகளில் எல்லாம் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், இந்த விஷயத்தில் இந்தியா சோபிக்க தவறியது ஒரு பின்னடைவாக கருதப்பட்டது. ஆனால் இந்த சூழலை மாற்றி காட்டியதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு முக்கியமான பங்கு உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க செய்து வருவதன் மூலமாக, காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய பிரச்னைகளை குறைப்பதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மறைமுகமாக உதவி செய்து வருகிறது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








