டாடா கூட மோதணும்னா இனி யாராச்சும் பொறந்துதான் வரணும்... சத்தமே இல்லாம தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கீட்டாங்க!
50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) உற்பத்தி என்ற மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் வெகு சமீபத்தில் கடந்திருந்தது. மஹாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த பிரம்மாண்ட மைல்கல் எட்டப்பட்டது.
இந்த சூழலில், 50 ஆயிரமாவதாக உற்பத்தி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக டெலிவரி செய்துள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி என்ற மைல்கல்லையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது கடந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் காரை, டாடா குழுமத்தின் தலைவரான சந்திரசேகரன்தான் டெலிவரி எடுத்துள்ளார். அது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் பயணிகள் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது வரை 3 தயாரிப்புகளை களமிறக்கியுள்ளது. அவை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV), டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV), மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரானது, ப்ரைம் (Prime) மற்றும் மேக்ஸ் (Max) என இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார்களின் விலை விபரம் பின்வருமாறு:
- டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் - 8.49 லட்ச ரூபாயில் இருந்து 11.79 லட்ச ரூபாய் வரை
- டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் - 12.49 லட்ச ரூபாயில் இருந்து 13.75 லட்ச ரூபாய் வரை
- டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (ப்ரைம்) - 14.99 லட்ச ரூபாயில் இருந்து 17.50 லட்ச ரூபாய் வரை
- டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (மேக்ஸ்) - 18.34 லட்ச ரூபாயில் இருந்து 20.04 லட்ச ரூபாய் வரை
- இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
தற்போதைய நிலையில் டியாகோ எலெக்ட்ரிக் கார்தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஆகும். ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலை சுமார் 4 சதவீதம் வரை உயரவுள்ளது. இதன்படி பார்த்தால், இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் சுமார் 35 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் தொகையை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த அதிரடி விலை உயர்வு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முதலிட அரியணையில் அமர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் போட்டிக்கு ஆளே இல்லை என்னும் அளவிற்கு, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது. இந்தியாவில் 100 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி என்றால், அது நிச்சயமாக 85 எலெக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகதான் இருக்கும்.
உலகம் தற்போது வேக வேகமாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகிறது. வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மதிப்பிருக்காது. அவற்றின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தை முன் கூட்டியே கணித்து, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனக்கென தனி இடத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிடித்து விட்டது. இந்த ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்வதற்காக வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இதில், டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது வெகு சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ காரை எலெக்ட்ரிக் அவதாரத்தில் (Tata Nano EV) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளி வந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா நானோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








