பஞ்ச் காரின் விலையை அதிரடியாக உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்... எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரின் விலையை அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அண்மையில் அதன் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. 0.9 சதவீதம் வரை அது விலையை உயர்த்தியது. இந்த விலை உயர்வு ஜனவரி 19ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், நிறுவனத்தின் புதுமுக வாகனங்களில் ஒன்றான பஞ்ச் காரின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக காட்சியளித்து வந்ததே இந்த பஞ்ச் கார். இதன் விலையில் தற்போது ரூ. 15,900 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பஞ்ச் காரின் விலையை டாடா உயர்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இந்த விலை உயர்வு பஞ்ச் கார் மாடலின் கிரியேட்டீவ் வேரியண்டிற்கு மட்டும் பொருந்தது. இதை தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளுக்கும் இவ்விலை உயர்வு பொருந்தும். புதிய விலை உயர்வால் டாடா பஞ்ச் காரின் ஆரம்ப விலை சற்றே மாறியிருக்கின்றது. ரூ. 5.49 லட்சம் என்ற ஆரம்ப விலையிலேயே பஞ்ச் விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

புதிய விலை உயர்வின் காரணத்தினால் ஆரம்ப விலை ரூ. 5.64 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இதன் உயர் நிலை வேரியண்டின் விலை ரூ. 8.98 லட்சமாக காட்சியளிக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். அனைத்து வேரியண்டுகளின் விலையையும் உயர்த்தியிருக்கும் டாடா மோட்டார்ஸ் கிரியேட்டீவ் வேரியண்டின் விலை மட்டும் குறைந்திருக்கின்றது.

ரூ. 10,100 வரை குறைத்திருக்கின்றது. ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டீவ் ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் டாடா பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், கூடுதல் தேர்வாக ரிதம், டேஸ்ஸில் மற்றும் ஐஆர்ஏ எனும் சிறப்பம்சங்களின் தொகுப்பையும் டாடா வழங்குகின்றது.

இவை ஒவ்வொன்றும் தனித்துவமான வசதிகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை தற்போது பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்குகின்றது. மிக விரைவில் இந்த காரில் சிஎன்ஜி தேர்வையும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

1.2 லிட்டர், 3 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பயரேடட் பெட்ரோல் எஞ்ஜினே பஞ்ச் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. 5 ஸ்பீடு ஏஎம்டி அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் என டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இக்காரில் வழங்கப்படுகின்றது.

இதே எஞ்ஜினே டிகோர் மற்றும் டியாகோ கார் மாடல்களில் பயன்படுத்தப்படுகின்றது. டாடா பஞ்ச் ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை இவ்வாகனம் பெற்றது. இதன் விளைவாக இந்தியாவின் மிக அதிக பாதுகாப்பான கார்களில் ஒன்றாக பஞ்ச் மாறியது.

மேலும், நிறுவனத்திற்கும் இதன் வாயிலாக பெருமிதம் சேர்த்தது. இதுமட்டுமின்றி, நவீன மற்றும் சொகுசான பயணத்தை வழங்கக் கூடிய அம்சங்கள் பலவும் பஞ்ச் காரில் வழங்கப்படுகின்றது. இதுமாதிரியான பன்முக காரணங்களினால் டாடா பஞ்ச் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இக்காரின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. மாருதி சுசுகி, கியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து டாடா மோட்டார்ஸும் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








