சூப்பர்... எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் டாடா நிறுவனம் அதிரடி திட்டம்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!
எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை விட, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு குவியும் முன்பதிவுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது.

எனவே எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்யும் வகையில், உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது டாடா எலெக்ட்ரிக் கார்களை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடந்த 2 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சராசரியாக தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு 5,500-6,000 முன்பதிவுகளை பெற்று வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, டிகோர் எலெக்ட்ரிக் கார் மற்றும் எக்ஸ்பிரஸ்-டி என 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

சமீபத்தில் கூபே ஸ்டைல் எஸ்யூவி கார் கான்செப்ட் ஒன்றையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கர்வ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கான்செப்ட் மாடலின் தயாரிப்பு நிலை வெர்ஷனை அடுத்த 2 ஆண்டுகளில், அதாவது 2024ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' இருப்பதாகவும், இதன் காரணமாக டெலிவரி எண்ணிக்கையில் நிலுவை ஏற்படுவதாகவும், அந்த நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவின் நிர்வாக இயக்குனரான சைலேஷ் சந்திரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''டெலிவரி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை, முன்பதிவு செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை விஞ்சி விட்டதை நாங்கள் காண்கிறோம். கடந்த 2 மாதங்களாக, ஒரு மாதத்திற்கு 5,500-6,000 முன்பதிவுகளை நாங்கள் பெற்று வருகிறோம். ஆனால் கடந்த மாதம் எங்களால் 3,300-3,400 யூனிட்களை மட்டுமே எங்களால் டெலிவரி செய்ய முடிந்தது.

எனவே ஒவ்வொரு மாதமும் டெலிவரி செய்ய வேண்டிய எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையில் நிலுவை ஏற்பட்டு விடுகிறது'' என்றார். இதன் காரணமாக எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கான காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் கார்கள் விரைவாக டெலிவரி கிடைக்கும் சூழலும் உருவாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செமிகண்டக்டர் சிப்களை அதிகளவில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது செமிகண்டக்டர் சிப்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை இருந்து வருவது அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான்.

இதன் காரணமாக கார்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால், செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்கவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2021-22ம் நிதியாண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 15,198 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 85.37 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான சந்தை பங்கை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Automobile Dealers Associations of India - FADA) புள்ளி விபரம் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, வரும் காலங்களில் அதன் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய வெர்ஷன், டிகோர் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன் மற்றும் அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








