பிரம்மாண்ட ஆர்டரை தட்டி தூக்கிய டாடா! இத்தன எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க போறாங்களா! இனி சொகுசா பயணம் செய்யலாம்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அளவிற்கு வேறு எந்த நிறுவனத்தாலும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் பஸ்களையும் (Electric Bus) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த சூழலில், மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தட்டி தூக்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வென்றிருப்பது, டெல்லியில் 1,500 எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான ஆர்டர் ஆகும். டெல்லி போக்குவரத்து கழகம்தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆர்டரை வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் தற்போது கையெழுத்தாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஎம்எல் சிவி மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (TML CV Mobility Solutions Ltd.) நிறுவனம் இந்த 1,500 எலெக்ட்ரிக் பஸ்களையும் சப்ளை செய்யும்.

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு இந்த 1,500 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதுடன், இயக்குவது மற்றும் பராமரிப்பது ஆகிய பணிகளையும் டிஎம்எல் சிவி மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம்தான் மேற்கொள்ளும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான தயாரிப்பான டாடா ஸ்டார் பஸ்கள்தான் (Tata Star Bus), டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு சப்ளை செய்யப்படவுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் 12 மீட்டர் நீளம் கொண்டிருக்கும்.
இவை தாழ் தள எலெக்ட்ரிக் பஸ்கள் ஆகும். இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் குளிர் சாதன வசதியும் இடம்பெற்றிருக்கும். எனவே வெயில் சுட்டெரித்தாலும் பயணிகள் மிகவும் சொகுசாக பயணம் செய்ய முடியும். இந்த ஒப்பந்தம் 12 ஆண்டுகளுக்கு கையெழுத்தாகியுள்ளது. அதாவது 12 ஆண்டுகளுக்கு, இந்த எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது ஆகிய பணிகளை டிஎம்எல் சிவி மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ளும்.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஷில்பா ஷிண்டே கூறுகையில், ''1,500 எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில், இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும். மாசு உமிழ்வும், சத்தமும் இல்லாத இந்த எலெக்ட்ரிக் பஸ்கள், டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும். சௌகரியமான இருக்கை மற்றும் அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளதால், பயணிகளுக்கும் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் நன்மை பயக்கும்'' என்றார்.
டிஎம்எல் சிவி மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அஸிம் குமார் முகோபாத்யாய் கூறுகையில், ''இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் பஸ் ஆர்டருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, உண்மையில் எங்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும். இந்த ஆர்டர் மூலம் எங்களுக்கும், டெல்லி போக்குவரத்து கழகத்திற்கும் இடையேயான உறவு வலுவடையும். டெல்லி பயணிகளுக்கு இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, ஹைப்ரிட், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் இத்தகைய வாகனங்கள்தான் அதிகளவில் இயங்கும் என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இன்ஜினியர்கள் இந்த விஷயத்தில் கடுமையான உழைப்பை வழங்கி வருகின்றனர். சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துவதால், பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதை பல்வேறு நாடுகளும் குறைத்து கொண்டு வருகின்றன.
அதற்கு பதிலாக மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை உலக நாடுகள் அதிகரித்து கொண்டுள்ளன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருவதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே 3 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், நான்காவதாக பன்ச் எலெக்ட்ரிக் காரை (Tata Punch EV) 2023ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








