5,000 கோடி ரூபாய்க்கான ஆர்டரை வெற்றிகரமாக கை பற்றிய டாடா மோட்டார்ஸ்... இந்தியாவின் மிக பெரிய டெண்டர்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிக பெரிய ஆர்டரை வெற்றிகரமாக கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஓர் மிக பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆர்டர் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது என்கிற கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த மிகப் பெரிய ஆர்டரை சிஇஎஸ்எல் (Convergence Energy Services Ltd)-இடமிருந்தே டாடா மோட்டார்ஸ் பெற்றிருக்கின்றது. 5,450 எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்க அண்மையில் சிஇஎஸ்எல் ஓர் டெண்டரை அறிவித்திருந்து. இதற்கு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல விண்ணப்பித்திருந்தன.

ஆனால், டாடா மோட்டார்ஸ் அளவிற்கு பிற நிறுவனங்கள் குறைவான மதிப்பில் டெண்டருக்கு விண்ணப்பிக்கவில்லை. இதன் விளைவாகவே இந்த மிகப் பெரிய ஆர்டர் தற்போது டாடா வசம் வந்து சேர்ந்துள்ளது. கிமீட்டருக்கான கட்டணம் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் அதன் கொட்டேசனை வழங்கியிருக்கின்றது.

அது மேற்கோள்காட்டிய கட்டண தொகை பிற நிறுவனங்களைக் காட்டிலும் பத்து ரூபாய் வரை குறைவானதாக இருந்ததாக தெரிகின்றது. இதன் அடிப்படையிலேயே டாடா டெண்டர் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஐந்து பிரிவுகளின்கீழ் எலெக்ட்ரிக் பேருந்துகளை டாடா மோட்டார்ஸிடம் இருந்து சிஇஎஸ்எல் வாங்கியிருக்கின்றது.

அவற்றின் விபரம்:
12 மீட்டர் நீளமுள்ள ஏசி வசதி அல்லாத மற்றும் ஏசி வசதி உள்ள லோவ் ஃப்ளோர் எலெக்ட்ரிக் பேருந்து,
ஏசி இல்லாத 12 மீட்டர் நீளமுள்ள வழக்கமான ஃப்ளூர் கொண்ட எலெக்ட்ரிக் பேருந்து,
9 மீட்டர் நீளமுள்ள வழக்கமான ஃப்ளூருடன் ஏசி வசதி உள்ள மற்றும் ஏசி அல்லாத எலெக்ட்ரிக் பேருந்து. இவற்றிற்கே ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கே எந்தவொரு நிறுவனமும் கொடுக்க முன் வராத ஓர் குறைவான மதிப்பில் டாடா மோட்டார்ஸ் கொட்டேசனை வழங்கியிருக்கின்றது. இதன் முழு விபரம் கீழே:
ஏசி அல்லாத 9 மீட்டர் நீளமுள்ள வழக்கமான ஃப்ளூரைக் கொண்ட எலெக்ட்ரிக் பேருந்திற்கு ஒரு கி.மீட்டருக்கு., ரூ. 39.21-ம்,
ஏசி வசதி உடைய 9 மீட்டர் நீளமுள்ள வழக்கமான ஃப்ளூரைக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் பேருந்திற்கு ஒரு கி.மீட்டருக்கு., ரூ. 41.45-ம்,
12 மீட்டர் நீளமுள்ள ஏசி வசதி அல்லாத லோவ் ஃப்ளோர் எலெக்ட்ரிக் பேருந்திற்கு ஒரு கி.மீட்டருக்கு., ரூ. 43.49-ம்,
12 மீட்டர் வழக்கமான ஃப்ளூரைக் கொண்டிருக்கும் ஏசி பேருந்திற்கு ரூ. 44.99-ம்,
ஏசி வசதிக் கொண்ட 12 மீட்டர் நீளமுள்ள லோவ் ஃப்ளூர் எலெக்ட்ரிக் பேருந்திற்கு ரூ. 47.49-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே டாடா மோட்டார்ஸ் கொட்டேசனை வழங்கியிருக்கின்றது. மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கட்டணங்கள் சார்ஜ் ஏற்றுதலுடன் கூடிய கட்டணம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் பேருந்துகள் டீசல் பேருந்துகளைக் காட்டிலும் பல மடங்கு பணத்தை மிச்சப்படுத்த உதவும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார், மினி ட்ரக், கனரக வாகனம் மற்றும் பேருந்து என பல தரப்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இதனால்தான் இந்நிறுவனம் இந்திய வாகன உலகின் ஜாம்பவான் என்று கூறப்படுகின்றது. இந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் அரசு துறையின் மிக பெரிய ஆர்டரை அது கைப்பற்றியிருக்கின்றது.

கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சூரத் ஆகிய ஐந்து முக்கிய நகரங்களின் பயன்பாட்டிற்காகவே இந்த உச்சபட்ச எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை சிஇஎஸ்எல் வாங்கியிருக்கின்றது. மிக விரைவில் அந்த நகரங்களின் சாலையில் டாடாவின் எலெக்ட்ரிக் பேருந்துகள் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் பேருந்துகள் 12 ஆண்டு காலம் பயன்பாட்டில் இருக்கும். இவை சுமார் 10 லட்சம் கிமீட்டர்கள் இயக்கப்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 1.88 பில்லியன் லிட்டர் எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, 3.31 மில்லின் டன் கார்பன் உமிழ்வையும் குறைக்க முடியும். இதன் வாயிலாக சுற்றுச் சூழலை பாதுகாப்பில் பெரிய மைல் கல்லை எட்ட முடியும் என நம்பப்படுகின்றது. இதுமட்டுமின்றி புதிய சுமார் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








