எல்லாரும் போட்டி போட்டுகிட்டு ஆர்டர் குடுக்கறாங்க... டாடா எலெக்ட்ரிக் காருக்கு இவ்ளோ பெரிய வரவேற்பா!
பிரபலமான விமான நிலையம் ஒன்றில் டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புதிய கார் வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் பலர் தற்போது வழக்கமான பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் கார்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

இதுதவிர சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் வாடிக்கையாளர்களை எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் இழுக்க தொடங்கியுள்ளது. எனவே ஏராளமான முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இந்தியாவில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் இந்த பந்தயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முன்னிலை வகிக்கிறது.

தற்போதைய நிலையில் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், டிகோர் எலெக்ட்ரிக் கார் மற்றும் டியாகோ எலெக்ட்ரிக் கார் என 3 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது. டாடா நிறுவன அளவில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் இதுதான்.

டாடா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் கூட இந்தியாவில் 2,847 நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு பெரிய வரவேற்பை வழங்கி வருகின்றனர்? என்பதற்கு இந்த எண்ணிக்கை சிறிய உதாரணம் மட்டுமே.

தனி நபர்கள் மட்டுமல்லாது, காவல் துறை போன்ற பல்வேறு அரசு துறைகளும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் மங்களூர் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தற்போது புதிதாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஒன்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டிற்கு வருவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம், மங்களூர் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் 2 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை வாங்கியது. விமான நிலையத்தில் இன்ஜினியரிங், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உதவியாக அவை வாங்கப்பட்டன.

தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருப்பது மூன்றாவது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த புதிய எலெக்ட்ரிக் காரும் விமான நிலையத்திலேயேதான் பணிகளை மேற்கொள்ளும். மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே 60kW DC CCS2 ஃபாஸ்ட் சார்ஜர் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மங்களூர் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு இதனை பயன்படுத்தி வருகிறது. அத்துடன் பொதுமக்களும் இந்த ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி கொள்ள முடியும். மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் ஏராளமான சார்ஜர்களை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் மங்களூர் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் முடிவு செய்துள்ளது. வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தனது ஐசி இன்ஜின் வாகனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதற்கு மங்களூர் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

வரும் காலங்களில் மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கவுள்ளது. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதே நேரத்தில், மத்திய, மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நிறுவனம் தனி ஆளாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மல்லுக்கட்டி கொண்டுள்ளன. வரும் காலங்களில் இன்னும் பல்வேறு பிரபலமான நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








