என்னதான் நல்ல பெயர் இருந்தாலும் இந்த விஷயத்துல டாடா தோத்துக்கிட்டே தான் இருக்குது...
டாடா நிறுவனத்தின் கடந்த அக்டோபர் மாத சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்ற நிறுவனம் டாடா நிறுவனம் தான். இந்நிறுவனம் சமீப காலமாக தயாரிக்கும் கார்களுக்கு சந்தையில் நல்ல ரிவியூவும் கிடைக்கிறது. இதனால் மக்கள் அதிகம் இந்த கார்களை பற்றி பேசுகின்றனர். டாடா நிறுவனத்தின் கார்கள் தரமான கார்களாக இருக்கும் என நம்புகின்றனர். இந்நிலையில் தற்போது கடந்த அக்டோபர் மாதம் டாடா நிறுவனத்தின் கார்கள் குறித்த விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் உள்நாட்டு விற்பனையில் மொத்தம், 45,423 கார்களை விற்பனை செய்துள்ளனர். இது கடந்தாண்டு இதே அக்டோபர் கால கட்டத்தை ஒப்பிடும் போது 33 சதவீதம் அதிகம். இதன் மூலம் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் மூன்றாவது நிறுவனமாக டாடா நிறுவனம் இருக்கிறது. முதலிடத்தில் மாருதியும் இரண்டாம் இடத்தில் ஹூண்டாயும் இருக்கிறது.

கடந்த மாதம் இந்நிறுவனத்திற்கு சொந்தமாக புனேவில் இருக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகள் நடந்ததால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்கெட்டில் இந்நிறுவனத்தின் கார்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. உள்நாட்டு விற்பனை ஏற்றுமதி என சேர்ந்து மொத்தமாக இந்நிறுவனம் மொத்தம் 78,335 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே மாதம் 67,829 கார்களை விற்பனை செய்திருந்தது. இது 15.48 சதவீத வளர்ச்சியாகும்.

டாடா நிறுவனத்தின் பயணிகள் வானகத்தின் விற்பனை மட்டும் மொத்தம் 45,217 ஆக இருக்கிறது. இதுவே கடந்த மாதம் வெறும் 33,925 ஆக இருந்தது. ஒரே ஆண்டில் இந்நிறுவனம் மொத்தம் 33 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையையும் டாடா செய்து வருகிறது. இந்த செக்மெண்டில் டாடா தான் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 4277 கார்கள் உள்நாட்டுவிற்பனை மற்றும் ஏற்றுமதியில் இருக்கிறது. இதுவே கடந்தாண்டு இதே அக்டோபர் மாதம் வெறும் 1660 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 158 சதவீத வளர்ச்சியாகும்.

கமர்ஷியல் வாகனத்தை பொருத்தவரை டாடா நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 32,912 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே நேரம் வெறும் 33,674 கார்களை விற்பனை செய்திருந்தது. விற்பனையில் 2 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டாடா நிறுவனம் வெளியிடும் தயாரிப்புகளிலேயே நெக்ஸான் என்ற காம்பேக்ட் எஸ்யூவி கார் தான் சிறப்பாக விற்பவனையாககும் காராக இருக்கிறது. இந்த கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் டாப் 10 கார்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கிறது. அதே போல டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் பஞ்ச் காரை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. அந்த காரும் விற்பனையில் அதிகமாக இருக்கிறது.

இது போக டாடா டியாகோ, ஆல்ட்ராஸ் ஆகிய கார்களும் நல்ல விற்பனையை பெற்றுள்ளது. அதே போல இந்நிறுவனம் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களை டாப் ரேஞ்ச் கார்களாக விற்பனை செய்து வருகிறது. இந்த இரண்டு கார்களும் இன்னும் சில மாதங்களில் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அப்டேட்டை பெறப்போகின்றன. டாடா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அசைக்க முடியாத வளர்ச்சியை பெற்று வருகிறது.

டாடா நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் ஹூண்டாய் மற்றும் மாருதியை பின்னிற்கு தள்ளி முதலிடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பும், டிமாண்டும் இருப்பதால் விரைவில் இதையும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








