விற்பனையில் ஹூண்டாயை பின்னுக்கு தள்ளிய டாடா மோட்டார்ஸ்... இதுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விற்பனையில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அசத்தி இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. கோவிட் 19 வைரசின் தாக்குதலுக்கு மத்தியிலும் சிறப்பான விற்பனை வளர்ச்சியை டாடா பெற்றிருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக கடந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை எண்ணிக்கை ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் விற்பனையையே மிஞ்சும் வகையில் அமைந்திருக்கின்றது. இது கூடுதல் ஆச்சரியத்தை இந்திய வாகன உலகிற்கு ஏற்படுத்தியது. இதன் வாயிலாக, தான் ஒரு ஜாம்பவான் நிறுவனம் என்பதை டாடா மிக அழுத்தமாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றது.

2021 டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 35 ஆயிரத்து 300 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. ஆனால், ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளோ 32,312 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. வித்தியாசம் மிக சிறியதாக காணப்பட்டாலும் இது டாடா நிறுவனத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

கொரோனாவினால் இக்கட்டான சூழ்நிலை உருவாகிய போதிலும் இத்தகைய அமோக வளர்ச்சியை டாடா பெறுவதற்கு என்ன காரணம் என்ற எண்ணமே தற்போது பலரின் மனதில் எழும்பியிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இந்த பதவில் பர்க்க இருக்கின்றோம். அதாவது, திடீரென டாடாவின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைப்பதற்கான காரணங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடாவின் தயாரிப்பு வரிசை
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. மக்களின் இந்த மனநிலையை புரிந்துக் கொண்ட டாடா மோட்டார்ஸ், எஸ்யூவி கார் பிரிவை குறி வைக்கும் வகையில் தனது தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், இந்தியா கொண்டு வரப்பட்டதே பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி மற்றும் சஃபாரி ஆகியவை.

அதேநேரத்தில், விலை குறைவான ஹேட்ச்பேக் மற்றும் சப்-காம்பேக்ட் ரக கார்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. டியாகோ மற்றும் டிகோர் கார் மாடல்களையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுமாதிரியான பன்முக தேர்வுகளை நிறுவனம் வழங்கி வருவதும் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

சிறப்பம்சங்கள் மற்றும் சொகுசு அம்சங்கள்
முந்தைய காலக் கட்டத்தில் விற்பனைக்குக் கிடைத்ததைக் காட்டிலும் தற்போதைய டாடா கார்கள் மிகவும் கவர்ச்சியான மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. போட்டி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் புதிய வசதிகளை டாடா சமீப காலமாக வழங்க தொடங்கியிருக்கின்றது.

ஹர்மேன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், கார் இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய பிற அம்சங்கள் பல சிறப்பு வசதிகளை டாடா அதன் தயாரிப்புகளில் வழங்கி வருகின்றது. ஆகையால், ஆடம்பர கார்களுக்கு இணையான அம்சங்கள் கொண்ட காராக டாடாவின் தயாரிப்புகள் இருக்கின்றன. இதனாலும், டாடாவின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

விலை
டாடா நிறுவனம் மாருதி சுசுகி நிறுவனத்தைக் காட்டிலும் சற்றே அதிக லாபத்தில் அதன் கார்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இருப்பினும், நாம் செலவு செய்யும் தொகைக்கு உகந்த வாகனமாக நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. ஆகையால், தயங்காமல் பலர் டாடாவின் கார்களை வாங்கி வருகின்றனர்.

நிறுவனத்தின் மிகவும் விலைக் குறைவான காராக டியாகோ இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட கார் மாடலாக சஃபாரி எஸ்யூவி இருக்கின்றது. மேலும், நிறுவனம் சில எலெக்ட்ரிக் கார்களையும் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், டாடா விற்பனைச் செய்து வரும் டிகோர் இவி-யே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகும். இக்கார் இந்தியாவில் ரூ. 11.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரும் விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

பாதுகாப்பு வசதிகள்
டாடாவின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, பஞ்ச், நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்கள் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் இத்தகைய சிறப்பான மதிப்பை பெற்று நிறுவனத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றன இந்த கார்கள்.

இதுமட்டுமின்றி டியாகோ, டிகோர் ஆகிய கார் மாடல்கள் ஐந்திற்கு நான்கு ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. இதன் காரணத்தினாலும் இந்தியாவில் டாடா கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை உயர்ந்துக் காணப்படுகின்றது.

இதுமாதிரியான காரணங்களே (மேலே பார்த்தவை) நாட்டில் டாடா கார்களின் விற்பனை உயரக் காரணமாக இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு இதன் விற்பனை அமைந்திருக்கின்றது. இனி வரும் காலத்திலும் இது மாதிரியான பன் மடங்கு உயர்ந்த விற்பனையே டாடா கார்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா கார்களின் விற்பனை பன்மடங்கு உயர்ந்துக் காணப்பட, அது முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக இருப்பதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சமீப சில காலமாக வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தகந்தது.


Click it and Unblock the Notifications








