செம்மையா விற்பனையாகும் டாடா கார்... இந்த உண்மையை தெரிஞ்சவங்க இந்த காரை வாங்காம இருக்க மாட்டாங்க!
டாடா பஞ்ச் (Tata Punch) காரின் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விற்பனைக்கு வழங்கி வரும் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றே இந்த பஞ்ச் (Tata Punch). இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். அதிக உறுதியான கட்டுமானம் மற்றும் அதீத பாதுகாப்பு திறன்களுக்காக மக்களால் இக்கார் பாராட்டப்பட்டு வருகின்றது. வாகனங்களை மோத வைத்து அவற்றின் பாதுகாப்பு திறன் குறித்து ஆராயும் குளோபல் என்சிஏபிகூட இக்காரை ஆஹா, ஓஹோ என புகழ்பாடியிருக்கின்றது.

என்சிஏபி மேற்கொண்ட அனைத்து மோதல் ஆய்விலும் மிக சிறப்பாக செயல்பட்டு ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைக் குவித்ததன் விளைவாகவே அந்த அமைப்பு அதன் பாராட்டை மிக வெளிப்படையாக தெரிவித்தது. இதுபோன்ற பல சிறப்புகள் இக்கார் கொண்டிருப்பதனால் வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, பிற மலிவு விலை கார்களைக் காட்டிலும் பஞ்ச் அதிக பாதுகாப்பானது என்கிற உண்மையை அறிந்திருப்பதனால் அக்காருக்கு இந்தியர்கள் பேராதரவு வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதன் விளைவாக தற்போது பஞ்ச் கார் இந்தியாவில் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றது. அதாவது, ஒரு லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமாக டாடா பஞ்ச் விற்பனையாகியிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் இக்காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி 10 மாதங்களே ஆகின்றன. இத்தகைய குறைவான நாட்களிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனையை அது பெற்றிருக்கின்றது. 2021 அக்டோபர் மாதத்திலேயே இக்காரை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதன் ஓராண்டு அறிமுக தினம் வருவதற்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன. இந்த நிலையிலேயே ஒரு லட்சம் யூனிட் விற்பனையை பஞ்ச் அசால்டாக க்ராஸ் செய்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் இதுவரை ஒரு லட்சம் யூனிட் பஞ்ச் கார்களை தங்கள் நிறுவனம் உற்பத்தி செய்து வெளியேற்றிருப்பதாக தெரிவித்திருக்கின்றது. மேலும், தங்கள் நிறுவனத்தின் ஃபாஸ்ட்டஸ்ட் செல்லிங் வாகனம் என பஞ்ச் காரை அது புகழ்பாட தொடங்கியிருக்கின்றது.

நிறுவனம் பஞ்ச் காரை ஆல்ஃபா பிளாட்பாரத்தை தழுவி உருவாக்கியிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தி நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது கார் மாடல் இதுவாகும். இதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே நிறுவனம் அல்ட்ராஸ் காரையும் தயாரித்து வருகின்றது. புதிய ஆல்ஃபா பிளாட்பாரத்தின் வாயிலாகவே பஞ்ச் காருக்கு மிகவும் அழகான தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

டாடா பஞ்ச் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன், விரைவில் இப்-பஞ்ச் காரில் டர்போ பெட்ரோல் மோட்டாரும் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இதுவரை டாடா சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஒரு வேலை டர்போ மோட்டாருடன் பஞ்ச் விற்பனைக்கு வரும் என்றால், அதுவே அதி-திறனை வெளிப்படுத்தும் பஞ்ச்-ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இக்காரை காசிரங்கா எனும் சிறப்பு பதிப்பின் கீழும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒற்றைக் கொம்பு காண்டா மிருகத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இந்த சிறப்பு பதிப்பை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காசிரங்கா நிறுவனத்தின் இன்னும் சில தயாரிப்புகளிலும் வழங்கப்படுகின்றது. இந்த தேர்வை நிறுவனம் ஸ்பெஷலாக ஃபோலியேஜ் கிரீன் நிற தேர்வில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல் இந்தியாவின் மலிவு விலை காராக பஞ்ச் இருக்கின்றது. ரூ. 5.93 லட்சம் என்ற மிகக் குறைவான விலையிலேயே பஞ்ச் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது. விற்பனைக்கு வந்த புதிதில் இந்த வாகனத்தின் ஆரம்ப விலை ரூ. 5.50 லட்சமாக இருந்தது. பல்வேறு காரணங்களால் அதன் விலை தொடர்ச்சியாக உயர்ந்து தற்போது ரூ. 6 லட்சத்தை நெருங்கியிருக்கின்றது. இது வெறும் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய மலிவு விலை காரணத்தினாலேயே இந்தியர்களின் ஃபேவரிட் காராக பஞ்ச் மாறியிருக்கின்றது. மேலும் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராகவும் பஞ்ச் மாற தொடங்கியிருக்கின்றது. இந்த காரின் மேனுவல் வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 18.82 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 18.97 கிமீ மைலேஜையும் வழங்கும்.


Click it and Unblock the Notifications








