அதுக்குள்ள 1 வருஷம் ஆயிடுச்சா!! புதிய டாடா சஃபாரியின் வயது 1
இந்திய சந்தையில் சஃபாரி எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1 வருடம் நிறைவு பெற்றுள்ளதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நினைவுக்கூர்ந்து கொண்டாடி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் எஸ்யூவி கார்களுக்கான ட்ரெண்ட் மிக நல்லப்படியாகவே முன்னேற்றம் கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளும் விதமாக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக எஸ்யூவி மாடல்களை களமிறக்கி வருகின்றன.

இந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களில் இருந்து கவனத்தை திருப்பி, எஸ்யூவி மாடல்களின் பக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயணம் கடந்த 2019இல் துவங்கியது. டாடா பிராண்டில் இருந்து அந்த ஆண்டில் நெக்ஸான், ஹெரியர் என இரு பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் களமிறக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து ஹெரியரின் 3-இருக்கை வரிசை வெர்சனாக சஃபாரியை கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இத்தகைய மாடர்ன் எஸ்யூவி மாடல்களின் மூலமாக இந்தியாவின் நம்பர்.1 எஸ்யூவி பிராண்டாக உருவெடுத்துள்ளதால், அதே மகிழ்ச்சியில் சஃபாரி அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடம் நிறைவடைந்துள்ளதையும் நம்முடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது.

முன்னதாக இந்தியாவின் நம்பர்.1 எஸ்யூவி பிராண்டாக ஹூண்டாய் விளங்கி வந்தது. 2020 மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை க்ரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, ஹூண்டாய் எஸ்யூவி கார்களின் விற்பனை புதிய உச்சத்திற்கு சென்றது. ஆனால் க்ரெட்டாவிற்கு வரவேற்பு மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளதால், ஹூண்டாய் சறுக்கல் கண்டு, டாடா மோட்டார்ஸ் முதலிடத்தை பெற்றுள்ளது.

கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த 2022 ஜனவரி மாதம் முடியும் வரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களில் டாடா மோட்டார்ஸின் பங்கு அதிகம் ஆகும். சஃபாரி எஸ்யூவி காரை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல் இது ஹெரியரின் 3-இருக்கை வரிசை வெர்சனாகும். அதாவது, ஹெரியரை காட்டிலும் சஃபாரி நீளம் அதிகமானது.

இதனால் ஹெரியரை காட்டிலும் 3 பயணிகள் கூடுதலாக அமரலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.99 லட்சங்களில் இருந்து ரூ.23.30 லட்சங்கள் வரையில் உள்ளன. மொத்தம் 26 விதமான வேரியண்ட்களில், ராயல் நீலம், டேடோனா க்ரே, ட்ராபிகல் மிஸ்ட் மற்றும் ஆர்கஸ் வொய்ட் என்கிற 4 விதமான நிறத்தேர்வுகளில் சஃபாரி கிடைக்கிறது.

விற்பனையில் இந்த டாடா எஸ்யூவி காருக்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போட்டியாக உள்ளன. இவை இரண்டுமே சஃபாரிக்கு கடுமையான போட்டி மாடல்கள் தான். இன்னோவா க்ரிஸ்டா நாடு முழுவதும் பிரபலமானது. எக்ஸ்யூவி700, மஹிந்திராவின் சமீபத்திய மாடர்ன் எஸ்யூவி கார் ஆகும்.

இவை இரண்டிலும் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சஃபாரியில் 2 லிட்டர் டீசல் என்ஜினை மட்டுமே ஒரேயொரு தேர்வாக டாடா நிறுவனம் வழங்கி வருகிறது. அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் சஃபாரியில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வையும் புதியதாக டாடா மோட்டார்ஸ் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விற்பனை போட்டியினை சமாளிக்க அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்புடனும் சஃபாரி விற்பனை செய்யப்படலாம். டாடா நிறுவனம் சமீபத்தில் தான் புதிய சஃபாரி கஸிரங்கா காரினை அறிமுகப்படுத்தி இருந்தது.

சஃபாரி கஸிரங்கா மட்டுமின்றி, நெக்ஸான், பஞ்ச், ஹெரியர் உள்ளிட்ட டாடாவின் மற்ற எஸ்யூவி கார்களுக்கும் கஸிரங்கா என்கிற பெயரில் ஸ்பெஷல் எடிசன்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து டெலிவிரிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த கஸிரங்கா எஸ்யூவி கார்கள் தான் விரைவில் நடைபெற இருக்கும் 2022 ஐபிஎல் போட்டிகளின்போது மைதானங்களில் நிறுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இவற்றை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் முனைப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. டாடா க்ரூப் தான் 2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முதன்மையான ஸ்பான்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வெளியிடப்பட்டிருந்த டீசர் படங்களை வைத்து பார்க்கும்போது, இந்த புதிய கஸிரங்கா கார்கள் அட்வென்ச்சர் பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








