மின்சார காராக உருவாகிறது டாடா சியாரா... எலெக்ட்ரிக் கார்களால் இந்தியாவை அலங்கரிக்கும் முயற்சியில் டாடா!
டாடா சியாரா இவி (Tata Sierra EV) எனும் பெயரில் மின்சாரா காராக விரைவில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உற்பத்திக்கான பச்சை கொடி கிடைத்ததை அடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் மிக சிறந்த மின் வாகன விற்பனையாளராக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விளங்குகின்றது. நிறுவனத்தின் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இரண்டும் இந்தியாவின் அதிக பாதுகாப்பான வாகனங்கள் ஆகும்.

நெக்ஸான் இவி ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும், டிகோர் இவி நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் கொண்டிருக்கின்றது. இவையும், இந்த மின்சார கார்கள் அதிகளவில் விற்பனையாக காரணமாக இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் அதன் மின்சார கார்களை ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி வருகின்றது.

இந்த நிலையில் இதுமாதிரியான சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றுமொரு அதிக சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம், அண்மையில் ரூ. 15 ஆயிரம் கோடியை மின் வாகன உற்பத்திக்காக ஒதுக்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

மேலும், இன்னும் ஐந்தாண்டுகளில் 10க்கும் அதிகமான புதுமுக மின்சார வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதாகவும் கூறியிருந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் சியாரா கார் மாடலை மிக விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சியாரா காரின் உற்பத்திக்கு அண்மையில் பச்சைக் கொடி கிடைத்திருக்கின்றது.

இதனைத் தொடர்ந்தே டாடா மோட்டார்ஸ் தற்போது சியாரா இவி காரின் உற்பத்தி பணியில் தீவிரமாக களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரை டாடா மோட்டார்ஸ் அதன் 'டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட்' (Tata Passenger Electric Mobility Limited) பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த பிராண்டின்கீழ் விற்பனைக்கு வரும் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும்.

இதுகுறித்த விபரத்தை ஆட்டோ கார் இந்தியா தளம் வெளியிட்டிருக்கின்றது. டாடா நிறுவனம் இந்த காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தியது. எதிர்கால வாகனம் இது என்பதை தெரியப்படுத்தும் வகையில் மிக அட்டகாசமான தோற்றம் மற்றும் வசதிகளை இது கொண்டிருந்தது.

இந்த வாகனத்தையே மிக விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் நிறுவனம் உருவாக்க இருக்கின்றது. ஐந்து கதவுகள் அமைப்புக் கொண்ட மின்சார காராக இது விற்பனைக்கு வர இருக்கின்றது. டாடா சியார இவி காரை நிறுவனம் அதன் சிக்மா பிளாட்பாரம் மற்றும் ஆல்ஃபா பிளாட்பாரத்தை தழுவி உருவாக்க இருக்கின்றது.

பன்மடங்கு அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட தயாரிப்பாக இந்த எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்கப்பட இருக்கின்றது. இதன் வருகை இந்தியாவில் 2025ம் ஆண்டிற்கு அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

குறிப்பாக என்ன மாதிரியான பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார்கள் டாடா சியாரா இவி எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது பற்றிய முக்கிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இவையனைத்தும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா நிறுவனம் மின்சார வாகனங்களை மட்டுமின்றி சிஎன்ஜியால் இயங்கக் கூடிய வாகனங்களை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம், நடப்பு மாதம் இந்தியாவில் தனது சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களான டியாகோ (Tiago) மற்றும் டிகோர் (Tigor) ஆகிய கார் மாடல்களே சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவை, வரும் ஜனவரி 19ம் தேதி அன்று விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. இந்த இரு சிஎன்ஜி கார்களுக்கும் ஏற்கனவே இந்தியாவில் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு பணிகள் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications