போட்றா வெடிய... இந்தியாவின் டெஸ்லாவாக உருவெடுக்கிறது டாடா... கேக்கும்போதே செம கெத்தா இருக்கு!
'இந்தியாவின் டெஸ்லா' என்ற செல்ல பெயருடன் அழைக்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கெத்து காட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். தற்போது பயணிகள் எலெக்ட்ரிக் வாகன சந்தையில், நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. இவை இரண்டுக்குமே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் 2,322 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது பார்ப்பதற்கு அதிக எண்ணிக்கையாக இருந்தாலும், உண்மையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஏனெனில் நடப்பாண்டு மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3,357 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 2,322 ஆக குறைந்துள்ளது. இது 31 சதவீத வீழ்ச்சியாகும். இந்த சரிவிற்கான காரணம் என்ன? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை போன்றவை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை காரணமாக பல்வேறு நிறுவனங்களின் கார் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி குறைவால், விற்பனையும் குறைந்து, பல்வேறு நிறுவனங்களும் வீழ்ச்சியை பதிவு செய்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சரிவில் இருந்து விரைவாக மீண்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாதம் விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும், நிதியாண்டு ஒப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில், எஸ்.எஸ். ராஜமௌலி படங்களை போல், மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கடந்த 2020-21ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக வெறும் 4,219 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின்பு வந்த 2021-22ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 19,106 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது 353 சதவீத வளர்ச்சியாகும்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2022-23ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப வெகு விரைவில் 2022 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

எலெக்ட்ரிக் கார் பந்தயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை முதல் ஆளாக ஓட வைத்து கொண்டிருப்பது நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான். இதுதான் தற்போது இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மே 11ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போதைய மாடலில் இருப்பதை காட்டிலும், இந்த புதிய மாடலில் பெரிய பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தொலைவும் அதிகமாக இருக்கும். இந்த புதிய மாடல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும் நமக்கு வரும் மே 11ம் தேதி கிடைத்து விடும்.

இதை தொடர்ந்து டிகோர் எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. முன்னதாக வெகு சமீபத்தில் கர்வ் மற்றும் அவின்யா என்ற பெயர்களில் 2 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது. இவை இரண்டுமே கான்செப்ட் மாடல்கள் ஆகும்.

இந்த கான்செப்ட் மாடல்கள் 'ஹை-டெக்' ஆக இருந்ததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. வரும் 2024 அல்லது 2025ம் ஆண்டு இந்த எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்கள் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால், 'இந்தியாவின் டெஸ்லா' என்ற செல்ல பெயரை டாடா மோட்டார்ஸ் சம்பாதித்து விடும் போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








