சிஎன்ஜி கார்களுடன் 2022ஆம் ஆண்டை துவங்கும் டாடா மோட்டார்ஸ்!! பெட்ரோல் & டீசல் விலை உயர்வை எண்ணி கவலை வேண்டாம்!
டாடா டியாகோ சிஎன்ஜி கார் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எரிபொருள்களின் விலை உயர்வினால் வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல பெட்ரோல் & டீசல் வாகனங்களில் இருந்து சிஎன்ஜி வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். ஏனெனில் இயற்கை வரிவாயுவின் விலை தற்போதைக்கு குறைவானதாகவே உள்ளது. இதனால் சிஎன்ஜி வாகனங்களில் எரிபொருளின் செலவு கிமீ-க்கு ரூ.1.60இல் இருந்து ரூ.1.70 வரையில் மட்டுமே ஆகிறது.

வாடிக்கையாளர்களின் தேவை மாறுவதை அறிந்த மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் முதல் சிஎன்ஜி வாகனம் தொடர்பான டீசரினை தற்போது வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக சிஎன்ஜி தேர்வை பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய 'பட்ஜெட்' ரக கார்களான டியாகோ ஹேட்ச்பேக் & டிகோர் காம்பெக்ட் செடானில் கொண்டுவர டாடா நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. இவற்றின் அறிமுகத்தை இந்த ஜனவரி மாதத்திற்கு உள்ளாக எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இந்த சிஎன்ஜி கார்களுக்கான முன்பதிவுகளும் தற்போது ரூ.11,000 என்கிற முன்தொகையுடன் துவங்கப்பட்டுள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிஎன்ஜி கார்களை கடந்த 2021 நவம்பர் மாதத்திலேயே அறிமுகப்படுத்திவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால் குறைக்கடத்திகளுக்கான பற்றக்குறையால் இந்த திட்டங்களில் தாமதம் ஏற்பட்டது. மேலும், அல்ட்ராஸ் சிஎன்ஜி காரையும் சோதனை ஓட்டங்களில் டாடா நிறுவனம் உட்படுத்தி வருகிறது. இதனால் இதன் அறிமுகத்தையும் டியாகோ சிஎன்ஜி & டிகோர் சிஎன்ஜி கார்களை தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.

அத்துடன் மலிவான நெகிழ்வு-எரிபொருளில் இயங்கக்கூடிய நெக்ஸான் காரையும் டாடா மோட்டார்ஸ் பரிசோதனை செய்துவருகிறது. புதிய டியாகோ சிஎன்ஜி & டிகோர் சிஎன்ஜி கார்களில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் சிஎன்ஜி தொகுப்புகளை தவிர்த்து, தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்பில்லை.

இதனை வெளிப்படுத்தக்கூடியதாகவே தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவும் விளங்குகிறது. இந்த இரு மலிவான டாடா கார்களும் தற்சமயம் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 86 எச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய சிஎன்ஜி வெர்சன்களிலும் இதே பெட்ரோல் என்ஜின் தான் பயன்படுத்தப்படும் என்றாலும், என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவு கணிசமாக குறையும். இதனாலேயே பொதுவாக சிஎன்ஜி கார்களில் அதிக மைலேஜ் கிடைக்கிறது. மற்றொரு முக்கியமான விஷயம், டியாகோ & டிகோர் பெட்ரோல் வெர்சன்களில் மேனுவல் & ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே கொடுக்கப்படும்.

பெட்ரோல் வேரியண்ட்களில் இருந்து வேறுப்பட்டு தெரிவதற்காக இவற்றில் சிஎன்ஜி முத்திரைகள் ஆங்காங்கே பொருத்தப்படும். இவற்றின் விலைகள் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதுவரையில் வெளியிடவில்லை. பொதுவாக பெட்ரோல் கார்களை காட்டிலும் சிஎன்ஜி கார்களின் விலைகள் அதிகமாக நிர்ணயிக்கப்படுவதே வழக்கம். இந்த வகையில் டியாகோ & டிகோர் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட்களின் விலைகளை தற்போதைய விலைகளை காட்டிலும் ரூ.30,000- ரூ.50,000 வரையில் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

இதில் டிகோர் மாடலானது பெட்ரோல், எலக்ட்ரிக் & சிஎன்ஜி என மூன்று விதமான தேர்வுகளிலும் விற்பனை செய்யப்படும் இந்தியாவின் முதல் செடான் கார் என்கிற புகழை பெறவுள்ளது. இருப்பினும் சிஎன்ஜி கார்களில் டாடா நிறுவனத்திற்கு மாருதி சுஸுகி முக்கிய போட்டி நிறுவனமாக விளங்கும். ஏனெனில் வருடத்திற்கு சுமார் 2.5 லட்ச சிஎன்ஜி கார்களை தயாரிப்பது என்கிற கொள்கை முடிவுடன் மாருதி சுஸுகி செயல்பட்டு வருகிறது.

டாடா நிறுவனத்தை போல், எரிபொருள் செலவை வாடிக்கையாளர்கள் சமாளிப்பதற்காகவும், கமர்ஷியல் கார் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாருதி சுஸுகியும் புதிய செலிரியோ சிஎன்ஜி, டிசைர் சிஎன்ஜி மற்றும் ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதேபோல் ஹூண்டாயும் சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10 மற்றும் அவ்ரா போன்ற தனது விலை குறைவான கார்களில் சிஎன்ஜி தேர்வை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications