விற்பனையில் சாதிக்கும் டாடாவின் பிரபலமான கார்... பாதுகாப்பு மட்டுமல்ல... இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு!
டாடா டிகோர் கார் விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒரே ஒரு செடான் ரக காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அது டிகோர் டிகோர் (Tata Tigor) ஆகும். இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 4,091 டிகோர் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 1,939 டிகோர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 110.98 சதவீத வளர்ச்சியாகும். வருடாந்திர ரீதியை போல், மாதாந்திர ரீதியில் ஒப்பிட்டாலும் கூட, டாடா டிகோர் கார் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,952 டிகோர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 4,091 ஆக உயர்ந்தது. இதன் மூலம் மாதாந்திர ரீதியில் டாடா டிகோர் கார், 38.58 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா டிகோர் காரின் விற்பனை வளர்ச்சிக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளை அறிமுகம் செய்ததுதான் டாடா டிகோர் காரின் சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கான முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. புதிய டிகோர் எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதே நேரத்தில் டாடா டிகோர் காரின் ஐ-சிஎன்ஜி மாடல் நடப்பாண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த புதிய மாடல்களின் வருகையே டாடா டிகோர் காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட எழுச்சிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. டிகோர் காரில், வழக்கமான ஐசி இன்ஜின், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என பல்வேறு தேர்வுகளை வழங்குவதன் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கவர்ந்துள்ளது.

டாடா டிகோர் காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட வளர்ச்சிக்கு இரண்டாவது காரணம் என்ன? என்பதை அனேகமாக நீங்களே யூகித்திருப்பீர்கள். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கே உரித்தான பாதுகாப்புதான் அந்த இரண்டாவது காரணம். குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா டிகோர் கார் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.

தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பிற்கு மிக அதிக முக்கியத்துவத்தை வழங்க தொடங்கியுள்ளனர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். புதிய கார்களை வாங்கும்போது, மோதல் சோதனைகளில் அந்த கார் எத்தனை நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது? என்பதையும் பார்க்கின்றனர்.

இது இந்திய வாடிக்கையாளர்களிடம் முன்பு காணப்படாத ஒரு வழக்கம் ஆகும். கார்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்திய வாடிக்கையாளர்களிடம் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதும், டாடா டிகோர் காரின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, டாடா டியாகோ சிஎன்ஜி ஆகியவை இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஆகும். வரும் மாதங்களில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரும் இந்த பட்டியலில் இணையவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இல்லாவிட்டால் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம். 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவும் நடைபெறவுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

நடப்பு 2022ம் ஆண்டிலேயே நடைபெற வேண்டிய ஆட்டோ எக்ஸ்போ திருவிழா, கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக தாமதமாகி விட்டது. ஒருவழியாக 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் என வெகு சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








