மாருதி, ஹூண்டாயை தொடை நடுங்க வைத்த டாடா! சிங்க முகத்தை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க! இனிமேல்தான் வேடிக்கையே இருக்கு
இந்திய சந்தையில் தற்போதெல்லாம் டாடா (Tata) நிறுவன கார்களின் விற்பனையில் அனல் பறக்கிறது. குறிப்பாக கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்திற்கு டாடா பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு சில மாதங்கள், ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது இடத்தை டாடா தட்டி பறிக்கவும் செய்துள்ளது.
ஹூண்டாய் மட்டுமல்லாது, கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் எழுச்சியால், நம்பர்-1 இடத்தில் உள்ள மாருதி (Maruti) நிறுவனத்திற்கும் டாடா பயம் காட்ட தொடங்கியுள்ளது. இந்த உத்வேகத்தை தக்க வைத்து கொள்வதற்காக, 2023ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அந்த கார்கள் குறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2023ம் ஆண்டில், ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) கார்களின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களும், இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள மாடல்கள் ஆகும். ஆனால் அவற்றில் பல்வேறு மாற்றங்களை செய்து, புதிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
இதன் மூலம் இந்த கார்களின் தற்போதைய தலைமுறை மாடல்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில், டாடா ஹாரியர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன் பகுதி டிசைன் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ரீ-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர் ஆகியவை வழங்கப்படலாம். அத்துடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்களும் கொடுக்கப்படலாம்.
மேலும் எல்இடி டெயில்லேம்ப் க்ளஸ்ட்டரும் அப்டேட் செய்யப்படலாம். இதுதவிர வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மாற்றங்களும், இதே வசதிகளும் டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த 2 கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும், இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் இருக்காது என கருதப்படுகிறது.
அதாவது தற்போது வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது. டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களிலும் தற்போதைய நிலையில், 2.0 லிட்டர் (1,956 சிசி), நான்கு சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் ஆப்ஷனுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களிலும் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாது என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த காலங்களிலேயே சூசகமாக தெரிவித்து விட்டது என்பது இங்கே நினைவுகூறதக்கது. இவை தவிர, ஹாரியர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான டாடா ஹாரியர் காரில் இருந்து வேறுபடுத்தும் வகையில், வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்களுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் தவிர, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரும் (Tata Punch EV), வரும் 2023ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு கீழாக, டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதுவும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்தான்.
இதன் மூலம் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் என்ற பெருமையை டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 350 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரியை டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் (Tata Altroz EV), வரும் 2023ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார்கள் எல்லாம் வெகு விரைவில் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo) காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாக்களின் ஒன்றான ஆட்டோ எக்ஸ்போ வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து இந்த கார்கள் அனைத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








