டாடாவுக்கு போட்டியாக மஹிந்திரா செய்யப்போகும் அதிரடியான காரியம்! சுதந்திர தினத்தில் சர்ப்ரைஸ் குடுக்க திட்டம்?
நடப்பாண்டு ஜூலை மாதம் அதிகமாக விற்பனையான டாப்-3 மஹிந்திரா கார்கள் குறித்தும், டாடாவிற்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் செய்யவுள்ள அதிரடி குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா நிறுவனம் 4வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா உள்ளன. இந்த செய்தியில், நடப்பாண்டு ஜூலை மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-3 மஹிந்திரா கார்கள் குறித்து பார்க்கலாம்.

மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero)
இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் பொலிரோவின் பங்களிப்பு மகத்தானது. நடப்பாண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார் இதுதான். மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 7,917 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 6,491 மஹிந்திரா பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜூலை மாதம் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700)
இந்தியாவில் நடப்பாண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் பட்டியலில் எக்ஸ்யூவி700 கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 6,277 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனையில் இல்லை.

அதாவது கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் விலைகள் அறிவிக்கப்பட்டு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விற்பனைக்கே கொண்டு வரப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட இயலாது. தற்போதைய நிலையில், வேரியண்ட்களை பொறுத்து மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு ஒரு ஆண்டிற்கும் மேலான காத்திருப்பு காலம் நிலவி வருகிறது.

இந்த மிக நீண்ட காத்திருப்பு காலத்திற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருப்பது முதல் காரணம். செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவது இரண்டாவது காரணம். செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால், இந்த காரின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு, டெலிவரி பணிகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்தியாவில் மொத்தம் 5 எலெக்ட்ரிக் கார்களை பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ளது. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களில் நமக்கு பதில் கிடைத்து விடும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300)
இந்தியாவில் நடப்பாண்டு ஜூலை மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட 3வது மஹிந்திரா கார் என்ற பெருமையை எக்ஸ்யூவி300 தன்வசப்படுத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 5,937 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 6,027 ஆக இருந்தது. இது 1 சதவீத வீழ்ச்சியாகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் ஒன்றும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும். இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 5 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? இந்த 5 எலெக்ட்ரிக் கார்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரும் ஒன்றாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இந்த பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களில் உள்ள எக்ஸ்யூவி700 மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய இரண்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கியவை ஆகும். இது இந்த கார்களுக்கு கிடைத்துள்ள உற்சாகமான வரவேற்பிற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








