விஸ்வரூபம் எடுத்த டாடா! இனி இதை செய்தால் மட்டுமே போட்டி நிறுவனங்களால் தாக்கு பிடிக்க முடியும்! சாரே கொல மாஸ்!
டாடா நெக்ஸான் கார் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 39,981 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதில், 2,846 எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் (பெட்ரோல், டீசல் கார்கள்) விற்பனை 38.91 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதே சமயம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 478.46 சதவீதம் உயர்ந்துள்ளது. வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதை இந்த புள்ளி விபரங்கள் நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை நெக்ஸான் (Tata Nexon) பெற்றுள்ளது. அத்துடன் இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் (அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கியது) டாடா நெக்ஸான் 5வது இடத்தை பிடித்துள்ளது.

கூடுதலாக இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில் டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 12,259 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 7,929 டாடா நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலம் டாடா நெக்ஸான் விற்பனையில் 54.60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், மேற்கண்ட பெருமைகள் அனைத்தையும் பெற்றுள்ளது. டாடா நெக்ஸான் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. டாடா நெக்ஸான் காரின் மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒன்றாக ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) இருந்து வருகிறது.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் பட்டியலில் ஹூண்டாய் வெனியூ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் 10,212 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11,224 ஆக இருந்தது.

இதன் மூலம் ஹூண்டாய் வெனியூ விற்பனையில் 9.01 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் 9,606 கிரெட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12,428 ஆக இருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் கிரெட்டா விற்பனையில் 22.70 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் ரஞ்சன்கான் (Ranjangaon) ஆலையில் நெக்ஸான் காரின் உற்பத்தி எண்ணிக்கை 3 லட்சம் என்ற மைல்கல்லை கடந்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் அறிவித்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இதனை கொண்டாடும் விதமாக புதிய வேரியண்ட்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், டாடா நெக்ஸான் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். கடுமையான சவால் நிறைந்த செக்மெண்ட்டில் டாடா நெக்ஸான் போட்டியிட்டு வருகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹூண்டாய் வெனியூ தவிர, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் போன்ற கார்களுடனும் டாடா நெக்ஸான் போட்டியிட்டு வருகிறது. டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்று என்பதுதான் மிக முக்கியமான காரணம். இன்னும் சொல்லப்போனால் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் தன்வசம் வைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் தற்போது விற்பனை செய்து வருகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது தன்வசம் வைத்துள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீப காலமாக போட்டி நிறுவனங்களுக்கு விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இனி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்று, பாதுகாப்பான கார்களை தயாரித்தால் மட்டுமே போட்டி நிறுவனங்களால் சமாளிக்க முடியும் என்ற நிலைமை கிட்டத்தட்ட உருவாகி விட்டது.

ஏனெனில் புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது பாதுகாப்பு ரேட்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியிருப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.


Click it and Unblock the Notifications








