கடந்த ஏப்ரலில்... மாருதி எர்டிகா கார்களின் விற்பனை எங்கயோ போய்டுச்சு!! விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 15 ஆயிரம்
கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எம்பிவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

எஸ்யூவி கார்கள் மீதான ஆர்வத்தினால், இந்தியாவில் எம்பிவி/ எம்யூவி கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் கடந்த சில வருடங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் எம்பிவி கார்களின் விற்பனை எண்ணிக்கைகள் பதிவாகி உள்ளன.

கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எம்பிவி காராக முதலிடத்தில் மாருதி சுஸுகி எர்டிகா உள்ளது. கடந்த ஏப்ரலில் மொத்தம் 14,889 எர்டிகா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எர்டிகாவின் இந்த விற்பனை எண்ணிக்கை ஆனது அதன் 2021 ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 72% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 8,644 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

எர்டிகா கார்களின் இந்த விற்பனை முன்னேற்றத்திற்கு மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரை முக்கியமான காரணமாக சொல்லலாம். சிறிய அளவிலான காஸ்மெட்டிக் திருத்தங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட்டில் புதிய என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகையில் எர்டிகா மாடலில் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் 1.5 லிட்டர் கே15சி 4-சிலிண்டர் இரட்டை-ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 103 பிஎஸ் மற்றும் 4,400 ஆர்பிஎம்-இல் 136 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் நிலையான தேர்வாகவும், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்பட்டுள்ளன.

எர்டிகாவிற்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் மஹிந்திரா பொலிரோ 7,686 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே 2021 ஏப்ரல் மாதத்தில் சற்று குறைவாக, 6,152 பொலிரோ எம்பிவி கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் மஹிந்திரா பொலிரோவின் விற்பனை கடந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரலில் 25% வளர்ச்சியடைந்துள்ளது.

பொலிரோ, கிட்டத்தட்ட 20 வருடங்களாக மஹிந்திராவின் நம்பிக்கைக்குரிய மாடலாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. டாப்-5 எம்பிவி கார்கள் வரிசையில் 3வது இடத்தை இம்முறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிடித்துள்ளது. 2021 ஏப்ரலில் வெறும் 3,600 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த இன்னோவா க்ரிஸ்ட்டா கடந்த ஏப்ரலில் சுமார் 76% அதிகமாக 6,351 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை இன்னோவா எம்பிவி மாடலை நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள்ளாக உலகளவில் வெளியீடு செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்த புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா நம் நாட்டு சந்தையில் அடுத்த 2023இல் விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா ஏற்கனவே நம் நாட்டில் சோதனை ஓட்டங்களின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியா கேரன்ஸ் எம்பிவி கார் இந்த வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த கேரன்ஸ் கார்களின் எண்ணிக்கை 5,754 ஆகும். 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள கேரன்ஸிற்கு மிக குறுகிய காலத்திலேயே சுமார் 50,000 முன்பதிவுகள் குவிந்தன. இதனால் இந்த கியா எம்பிவி காரை முன்பதிவு செய்துவிட்டு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு 75 வாரங்கள் வரையில் தற்சமயம் உள்ளன.

கடைசி 5வது இடத்தில் மாருதி சுஸுகியின் பிரீமியம் தர எம்பிவி காரான எக்ஸ்.எல்6 4,366 யூனிட்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது 3,373 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2021 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் 29% அதிகமாகும். ஆனால் எக்ஸ்.எல்6 பிரீமியம் எம்பிவி காரின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

ஏனெனில் எர்டிகாவை தொடர்ந்து மெருக்கேற்றப்பட்ட எக்ஸ்.எல்6 மாடலை சில வாரங்களுக்கு முன்புதான் மாருதி சுஸுகி சந்தையில் அறிமுகப்படுத்தியது. புதிய எக்ஸ்.எல்6 காரில் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்க க்ரில், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்பட டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு, சுஸுகி கனெக்ட் மற்றும் 360-கோண கேமிரா போன்ற தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








