நாளை அறிமுகமாகிறது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிக்கும் டொயோட்டாவின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார்...
டொயோட்டா நிறுவனத்தின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு கார் நாளை இந்திய சந்தையில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சமீபத்தில், எதிர்கால வாகனங்கள் குறித்து 62வது ஏசிஎம்ஏ ஆண்டு மாநாடு (62nd ACMA Annual Session' on Future of Mobility), தலைநகர் டெல்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார். அவர், எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் வாகனங்கள் சிலவற்றின் பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அந்தவகையில், டொயோட்டா வெளியீடு செய்ய தயார்படுத்தியிருக்கும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு காரின் வருகையை பற்றியும் அவர் கூறினார். நாளைய (செப்டம்பர் 28) தினமே டொயோட்டாவின் இந்த சிறப்புமிக்க கார் வெளியீட்டைப் பெற இருக்கின்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே அக்காரை வெளியீடு செய்ய இருக்கின்றார்.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த கார் பற்றிய வேறு எந்த முக்கிய தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. எந்த மாடலை ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் பவர்டு காராக டொயோட்டா கொண்டு வர இருக்கின்றது, அதில் என்ன மாதிரியான அம்சங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கும் என்பது போன்ற எந்த தகவலும் அக்கார் குறித்து வெளியிடப்படவில்லை.

அதேநேரத்தில், பிரேசில் சந்தையில் அண்மையில் வெளியீட்டைப் பெற்ற கொரோல்லா அல்லது கேம்ரி இவை இரண்டில் ஏதேனும் ஒன்றே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கொரோல்லா, ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதனை, 2.0 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜினும், 1.8 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்விலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இரு மோட்டார்களுடன் சேர்த்து மின் மோட்டாரும் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டாரின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், அது, பெட்ரோல், எத்தனால் அல்லது இவையிரண்டும் கலக்கப்பட்ட எரிபொருளில் இயங்கும்.

இதே மாதிரியான வசதிகள் கொண்ட கேம்ரி அல்லது கொரோல்லா காரே நாளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதுவும், பெட்ரோல் அல்லது எத்தனால் அல்லது இவையிரண்டும் கலக்கப்பட்ட எரிபொருளில் இயங்கும். இத்துடன், ஹைபிரிட் தொழில்நுட்பமும் இக்காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அனைத்து விபரங்களும் நாளையே வெளியிடப்பட இருக்கின்றன.

ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனம் என்றால் என்ன?
பெட்ரோல், எத்தனால் அல்லது இவை இரண்டும் கலக்கப்பட்ட எரிபொருள் என இந்த மூன்றில் எதை நிரப்பினாலும் இயங்கும் திறன் கொண்டதே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு வாகனம் ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் வாகனங்கள் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், இ100 எனப்படும் நூறு சதவீதம் எத்தனாலால் மட்டுமே இயங்குகின்ற வாகனம் இன்னும் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நிலைமையையே நாளை டொயோட்டா அதன் ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் வாகனத்தின் அறிமுகத்தால் மாற்ற இருக்கின்றது.

ஃப்ளெக்ஸ் ஃப்யூவலால் வாகனங்களால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வெறும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு வாகனங்கள் சிறந்த திறனை வெளியேற்றக் கூடியவையாக இருக்கின்றனந. இதனால், அதிகம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்தும்போது வாகனங்கள் அதிக பவரையும், டார்க்கையும் வெளியேற்றுகின்றன. அதேவேலையில், பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் இவை சற்று குறைவான மைலேஜையே வழங்கும் என கூறப்படுகின்றது. ஆனால், பெட்ரோலைக் காட்டிலும் எத்தனால் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பதால் இதனால் பெரியளவில் சிக்கல் ஏற்படாது என கூறப்படுகின்றது.

ஏன் இந்தியாவிற்கு ஃப்ளெக்ஸ் வாகனங்கள் முக்கியம்?
எரிபொருளுக்காக இந்திய பிற நாடுகளையே சார்ந்திருக்கும் சூழல் இப்போது நிலவுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்கும் பொருட்டே இந்தியாவின் பெரும் எதிர்பார்ப்பாக ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் இருக்கின்றன. எத்தனாலை கரும்பு போன்ற விவசாய கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும். இவற்றை தயாரிக்க ஆகும் செலவும் மிகக் குறைவாகும். எனவே நாட்டு மக்களுக்கு குறைவான விலையில் எத்தனாலை விற்க முடியும் என அரசு நம்புகின்றது.

80 சதவீதம் பெட்ரோல் மற்றும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறினாலேயே ஆண்டிற்கு ரூ. 30 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்த முடியும் என சியாமின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் இன்னும் பல மடங்கு தொகையை அரசால் மிச்சப்படுத்த முடியும். அடுத்த ஆண்டே இ20 எரிபொருள் திட்டம் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
குறிப்பு: அனைத்து படங்களும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








