கார்கள் விற்பனையில் உலகின் நம்பர்.1 பிராண்டாக டொயோட்டா!! 2021இல் இத்தனை கார்களை விற்றுள்ளதா?
உலகளவில் பிரபலமான கார் பிராண்டாக விளங்கும் டொயோட்டா கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டாவிற்கு அறிமுகமே தேவை இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு உலகம் முழுவதிலும் இந்த பிராண்டின் தயாரிப்புகள் விரிவடைந்துள்ளன. டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த 2021ஆம் ஆண்டில் 10.1% அதிகரித்துள்ளது.

இதன் மூலமாக, இரண்டாவது முறையாக உலகளவில் அதிகம் கார்களை விற்பனை செய்யும் பிராண்டாக டொயோட்டா உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 10.5 மில்லியன் (1 கோடியே 5 லட்சம்) வாகனங்களை உலகளவில் விற்பனை செய்துள்ளதாக டொயோட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டொயோட்டாவின் துணை பிராண்ட்களான டைஹட்சூ மோட்டார்ஸ் மற்றும் ஹினோ மோட்டார்ஸின் வாகனங்களும் அடங்குகின்றன.

டொயோட்டாவிற்கு அடுத்து அதிகளவில் ஆட்டோமொபைல் வாகனங்களை விற்பனை செய்த இரண்டாவது நிறுவனமாக ஃபோக்ஸ்வேகன் விளங்குகிறது. கடந்த ஆண்டில் மொத்தம் 8.9 மில்லியன் வாகனங்கள் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஜெர்மன் ஆட்டோமொபைல் பிராண்டான ஃபோக்ஸ்வேகன் கடந்த 10 வருடங்களில் பதிவு செய்துள்ள மிக குறைந்த வாகன விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த 2020ஆம் ஆண்டில் கூட இதனை காட்டிலும் 5% அதிக வாகனங்களை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்திருந்தது. இதற்கு காரணம், கடந்த 2021ஆம் ஆண்டில் சிப்-களுக்கு உலகளவில் ஏற்பட்ட பற்றாக்குறையால் ஃபோக்ஸ்வேகனின் வாகன தயாரிப்பு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இத்தகைய சூழல் இந்த 2022ஆம் ஆண்டின் முதல் பாதி முழுவதும் இருக்கும் என ஃபோக்ஸ்வேகன் கூறுகிறது.

2021ஆம் ஆண்டு விற்பனை எண்ணிக்கை டொயோட்டாவிற்கு 2022ஆம் ஆண்டை நல்லப்படியாக துவங்க ஊக்கமளித்துள்ளது. இருப்பினும் அதிகளவில் கார்களை விற்பனை செய்யும் பிராண்ட் என்கிற பெயரை நடப்பு 2022ஆம் ஆண்டிலும் டொயோட்டா தொடர வாய்ப்புகள் சற்று குறைவே என்று தோன்றுகிறது. ஏனெனில் சமீபத்தில்தான் ஜப்பானில் வாகன தயாரிப்பு பணிகளை குறைத்து கொள்ள டொயோட்டா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஜப்பானில் தொழிற்சாலை பணியாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து இவ்வாறான நடவடிக்கையில் இறங்க டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. இவ்வாறு உலகளவில் குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை மட்டுமின்றி வைரஸ் பரவலும் டொயோட்டாவிற்கு சற்று தலைவலியாக அமைந்துள்ளது.

நடப்பு 2022 ஜனவரி மாதத்தில் தயாரிப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை வழக்கத்தை காட்டிலும் 65,000 குறைத்து கொள்ள உள்ளதாக முன்னதாகவே டொயோட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது 2021 டிசம்பர் மாதத்தில் டொயோட்டா குறைத்திருந்த வாகனங்களின் எண்ணிக்கையை காட்டிலும் 18,000 அதிகமாகும். இதேபோல் வரும் பிப்ரவரி மாதத்திலும் டொயோட்டா தனது தொழிற்சாலை பணிகளை குறைத்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலை டொயோட்டாவிற்கு மட்டுமில்லை, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகிக்கு கூட தற்சமயம் உள்ளது. இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்தியாவில் அதன் தொழிற்சாலை பணிகளை கணிசமாக குறைத்து கொண்டு வந்துள்ளது. இதன் விலைவாக மாருதி கார்களின் விற்பனை கடந்த மாதங்களில் குறைந்தன.

குறைக்கடத்தி பற்றாக்குறையால் தயாரிப்பு பணிகள் தடைப்பட்டு போக, ஊரடங்கு உத்தரவுகள் தயாரிப்பு பாகங்கள் கிடைப்பதையும், மற்ற போக்குவரத்துகளையும் தாமதமாக்குகின்றன. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனங்களான சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் 10.5 மில்லியன் அளவிற்கு இல்லையென்றாலும், இந்த 2022ஆம் ஆண்டின் வாகன விற்பனையில் 9 மில்லியனை இலக்காக நிர்ணயித்துள்ளதாக கடந்த வாரத்தில் டொயோட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய நிலைமையை வைத்து பார்க்கும்போது இது முடியாது என்றே தோன்றுகிறது. குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் பல டொயோட்டா கார்கள் அதிகப்படியான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன. இந்த வகையில் உலகளவில் பிரபலமான டொயோட்டா காரான லேண்ட் க்ரூஸருக்கு சுமார் 4 ஆண்டுகள் வரையில் காத்திருப்பு காலம் தற்சமயம் உள்ளதாக சமீபத்தில் டொயோட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications








