எல்லா கம்பெனியும் இப்படியே பண்ணினால் எப்படி? கார் வாங்கற ஆசையே போயிரும் போல இருக்கு!
இந்தியாவில் டொயோட்டா கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. ஏற்கனவே ஆடி, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள், வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, கார்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இந்த பட்டியலில் தற்போது டொயோட்டா நிறுவனமும் இணைந்துள்ளது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா நிறுவன கார்களின் விலை 4 சதவீதம் வரை உயரவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டொயோட்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. டொயோட்டா கார்களின் விலை உயர்வும் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்துதான் அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர், அர்பன் க்ரூஸர் மற்றும் க்ளான்சா ஆகிய கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதில், கடைசி 2 கார்கள், அதாவது அர்பன் க்ரூஸர் மற்றும் க்ளான்சா ஆகியவை மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து பெறப்படுபவையாகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா காரை அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலும், பலேனோ காரை க்ளான்சா என்ற பெயரிலும் டொயோட்டா நிறுவனம் தங்களது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. சுஸுகி நிறுவனத்துடனான டொயோட்டா நிறுவனத்தின் கூட்டணியின் அடிப்படையில் இந்த விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

இதில், டொயோட்டா க்ளான்சா காரின் 2022 மாடல் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி பலேனோ காரின் 2022 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, டொயோட்டா நிறுவனமும் க்ளான்சா காரின் 2022 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது.

ஆனால் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 2022 டொயோட்டா க்ளான்சா காருக்கு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு பொருந்துமா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. டொயோட்டா நிறுவனம் கூடிய விரைவில் க்ளான்சா காரில் சிஎன்ஜி தேர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு களமிறக்கப்படும். இதுதவிர அர்பன் க்ரூஸர் காரின் புதிய தலைமுறை மாடலையும் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா சந்தைக்கு வந்தவுடன், அர்பன் க்ரூஸர் காரின் புதிய தலைமுறை மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து இன்னும் பல்வேறு கார்களை பெறுவதற்கு டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் அர்பன் க்ரூஸர் மற்றும் க்ளான்சா ஆகிய கார்கள் டொயோட்டா நிறுவனத்திற்கு ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன. எதிர்காலத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஏற்கனவே ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதால், எண்டேவர் மூலம் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இருந்து வந்த போட்டி குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு, டொயோட்டா கார்களின் விற்பனையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








