விற்பனையில் சரிவுடன் 2022ஐ துவங்கி இருக்கும் டொயோட்டா!! ஜனவரி மாத விற்பனை நிலவரம்!
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனங்களான டொயோட்டாவும், சுஸுகியும் இந்தியாவில் முன்னணி பிராண்ட்களாக உள்ளன. இதில் சுஸுகி நிறுவனம் மாருதி உடன் இணைந்து இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது. டொயோட்டா தனித்து தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியாவிலும் மாருதி சுஸுகி & டொயோட்டாவின் கூட்டணி தொடர்கிறது. சுஸுகி கார்களின் அளவிற்கு இல்லையென்றாலும், நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2022 ஜனவரி மாதத்தில் மொத்தமாக 7,328 கார்களை இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதுவே, 2021 ஜனவரி மாதத்தில் சுமார் 11,126 யூனிட் கார்களை இந்த ஜப்பானிய நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் டொயோட்டா கார்களின் விற்பனை இந்தியாவில் கிட்டத்தட்ட 34.14% கடந்த ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளது. அதேபோல் கடந்த 2021 டிசம்பர் மாதத்திலும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் (10,832 யூனிட்கள்) டொயோட்டா கார்கள் விற்கப்பட்டு இருந்தன.

இதன்படி பார்க்கும்போது டொயோட்டா கார்களின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பீடுகையில் 32.35% சரிந்துள்ளது. உண்மையில் இந்திய சந்தையில் வலுவாக கால் பதிக்க டொயோட்டா பல வருடங்களாக போராடி கொண்டுதான் இருக்கிறது. டொயோட்டா பிராண்ட்டில் இருந்து இன்னோவா க்ரிஸ்ட்டா & ஃபார்ச்சூனர் என்ற இரு மாடல்கள் மட்டுமே தற்போதைக்கு இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளன.

மற்றவை இன்னமும் விற்பனையில் தள்ளாடி கொண்டுதான் இருக்கின்றன. இதனால் தான் பிரபலமான சுஸுகி கார்களை கூட்டணி கொள்கையின் மூலமாக தனது பிராண்டில் ரீ-பேட்ஜ்டு மாடல்களாக டொயோட்டா கொண்டுவந்தது. இந்த வகையில் மாருதி சுஸுகி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களின் டொயோட்டா ரீபேட்ஜ்டு வெர்சன்களாக க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கொண்டுவரப்பட்டது.

இவை இரண்டின் மொத்த விற்பனையில் நீண்ட மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் டொயோட்டா 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்தது. இதில் 2019 ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட க்ளான்ஸா பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் இதுவரையில் 65,000க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட அர்பன் க்ரூஸர் சப்காம்பெக்ட் எஸ்யூவி 35,000க்கும் அதிகமான யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

இவை இரண்டும் சுஸுகி பலேனோ & விட்டாரா பிரெஸ்ஸா அளவிற்கு இல்லை என்றாலும், டொயோட்டாவிற்கு கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுதர ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் முதல்முறையாக டொயோட்டா கார்களை வாங்குவோரில் கிட்டத்தட்ட 66 சதவீதத்தினர் க்ளான்ஸா & அர்பன் க்ரூஸரை தான் தேர்வு செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாடிக்கையாளர்கள் பெரும்பான்மையாக டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில்தான் உள்ளனராம். உரிமையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் டொயோட்டா அதன் வாடிக்கையாளர்களுக்காக எக்ஸ்பிரஸ் பராமரிப்பு 60 (EM60), க்யூ சேவை, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் சேவை தொகுப்புகளை வழங்கி வருகிறது.

கடந்த 2021இல் டொயோட்டா க்ளான்ஸா கார்களின் விற்பனை 2020ஆம் ஆண்டை காட்டிலும் கிட்டத்தட்ட 25% அதிகரித்துள்ளது. இவ்வாறு இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களை தாண்டி க்ளான்ஸா, அர்பன் க்ரூஸர் போன்றவற்றிற்கும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளதால், டொயோட்டா டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் அதன் சந்தையை விரிவாக்கம் செய்ய தயாராகி வருகிறது.

தற்போதைக்கு இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தம் 418 டீலர் விற்பனை மையங்கள் உள்ளன. அத்துடன் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு மெய்நிகர் இணைய ஷோரூமையும் டொயோட்டா கையாண்டு வருகிறது. ரீ-பேட்ஜ்டு வெர்சன்கள் என்பதால், பலேனோ & விட்டாரா பிரெஸ்ஸாவின் தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் என்ஜின் தேர்வுகளை கூட க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் மாடல்கள் தொடர்ந்துள்ளன.

ஜி மற்றும் வி என்கிற இரு விதமான ட்ரிம் நிலைகளில் டொயோட்டாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான க்ளான்ஸா இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.49 லட்சங்களில் இருந்து ரூ.9.45 லட்சங்கள் வரையில் தற்சமயம் உள்ளன. மறுப்பக்கம் அர்பன் க்ரூஸர் மிட், ஹை & பிரீமியம் என மூன்று ட்ரிம் நிலைகளில் விற்கப்படுகிறது. இதன் விலைகள் ரூ.8.72 லட்சங்களில் இருந்து ரூ.11.4 லட்சங்கள் வரையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








