எத்தனால், பெட்ரோல், மின்சாரம் என 3லும் ஓடும் டொயோட்டா கார் அறிமுகம்! இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார்
எத்தனால், பெட்ரோல், எத்தனால்-பெட்ரோல் கலக்கப்பட்ட ஆயில் மற்றும் மின்சாரம் என அனைத்திலும் இயங்கும் ஃப்ளெக்ஸி ஃப்யூவல் காரை டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒட்டுமொத்த நாட்டின் பெரும் எதிர்பார்ப்பான கொரோல்லா ஆல்டிஸ் (Corolla Altis) காரை டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. ஃப்ளெக்ஸி ஃப்யூவல் ஸ்ட்ராங் ஹைபிரிட் (Flexi-Fuel Strong Hybrid Electric Vehicles) அம்சத்துடன் இக்காரை நிறுவனம் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான அம்சத்துடன் நாட்டில் அறிமுகத்தைக் காணும் முதல் வாகனம் இதுவே ஆகும்.

இந்த சிறப்பின் காரணமாகவே இவ்வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு வாகன பிரியர்கள் மத்தியில் பல்கிபெருகி காணப்பட்டது. இந்த நிலையிலேயே அதிகாரப்பூர்வமாக ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வாயிலாகவே டொயோட்டா நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

காரை வெளியீடு செய்ததைத் தொடர்ந்து அமைச்சர் அதே காரில் ஒரு ரவுண்டு சென்று வந்தது குறிப்பிடத்தகுந்தது. வெளியீடு நிகழ்ச்சியில் பங்கேற்றது இடது கை டிரைவ் வசதிக் கொண்ட ஆல்டிஸ் ஆகும். டொயோட்டா நிறுவனம் இதுபோன்ற தனது மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனத்தை வெளியீடு செய்வது முதல் முறையல்ல. ஏற்கனவே, முதல் முறையாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் மிராய் காரை அது வெளியீடு செய்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் கொரோல்லா ஆல்டிஸ் காரை அது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வாகனத்தின் தனி சிறப்பே அது பெட்ரோல் அல்லது எத்தனால் என இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டது என்பதுதான். இதுமட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் எத்தனால் இரண்டும் கலக்கப்பட்ட எரிபொருளிலும் அது இயங்கும்.

இந்த அம்சங்களுடன் கூடுதல் சிறப்பாக ஹைபிரிட் தொழில்நுட்பமும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆமாங்க, இந்த கார் மின்சாரத்தாலும் இயங்கும். இதற்காக 1.3 kWh பேட்டரி பேக்கும், 53.7 kW மற்றும் 162.5 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடனேயே 1.8 லிட்டர் எத்தனால் மற்றும் பெட்ரோலில் இயங்கக் கூடிய மோட்டாரும் கொரோல்லா ஆல்டிஸ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் 75.3 kW பவரையும், 142 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் இயக்கத்தை சீரானதாக மாற்றும் விதமாக சிவிடி ஹைபிரிட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் கொரோல்லா ஆல்டிஸில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற தனி சிறப்புகள் கொண்ட வாகனத்தையே மத்திய அமைச்சர் வாயிலாக டொயோட்டா அறிமுகம் செய்திருக்கின்றது.

டொயோட்டா மட்டுமின்றி இன்னும் பல நிறுவனங்கள் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. அந்தவகையில், டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் இந்த ரக வாகன உருவாக்க பணியில் களமிறங்கியிருக்கின்றன.

இந்த நிலையிலேயே அனைத்து நிறுவனங்களுக்கும் முன்னோடியாக டொயோட்டா ஃப்ளெக்ஸி ஃப்யூவல் பவர்டு ஹைபிரிட் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை நிறுவனம் எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும், என்ன விலையில் விற்பனைக்குக் களமிறக்கும் என்பதுபோன்ற முக்கிய தகவல் வெளியிடவில்லை. இந்த நிலை டொயோட்டா கார் பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் அல்லாத வாகனங்களின் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக விரைவில் அரசு வரி விதிப்பு முறையையே மாற்ற இருக்கின்றது. ஓர் வாகனத்தின் மாசு வெளியேற்றம் தன்மையை பொருத்து வரி விதிப்பை மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகையால், ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








