டொயோட்டா கார்களின் விற்பனையில் மிகப்பெரிய முன்னேற்றம்... இவ்ளோ பெரிய வளர்ச்சியா!
டொயோட்டா நிறுவனம் கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் முடிந்து, அக்டோபர் மாதத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் அனைத்து கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்களும் தற்போது வெளியாகி கொண்டுள்ளன. இந்த வரிசையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 15,378 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 9,284 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் விற்பனையில் 66 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

வரும் மாதங்களில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டொயோட்டா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இந்த காரின் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் கிட்டத்தட்ட 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் சமீபத்தில் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா போன்ற கார்களுக்கு போட்டியாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இன்னும் பல்வேறு கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், புதிய 2022 அர்பன் க்ரூஸர் கார் ஒன்றாகும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 2 கார்களையும் நமது வாசகர்கள் ஒன்றாக குழப்பி கொள்ளக்கூடாது.

ஏனெனில் இரண்டும் வெவ்வேறு கார்கள் ஆகும். டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் அடிப்படையிலான அர்பன் க்ரூஸர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் 2022 பிரெஸ்ஸா காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், டொயோட்டா நிறுவனமும் புதிய 2022 அர்பன் க்ரூஸர் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

நடப்பு 2022ம் ஆண்டு இறுதிக்குள் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு வந்து விடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் என்ற புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் வரும் நவம்பர் மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் இந்த கார் முறைப்படி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இதுதவிர டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் புதிய தலைமுறை மாடலும் வெகு விரைவிலேயே சந்தைக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications








