கொஞ்சம் நாள் பொறுங்க.. வாகனங்களுக்கான வரி விதிப்பை மாற்றியமைக்கும் பணியில் மத்திய அரசு!
மத்திய அரசாங்கம் வாகனங்களின் வரிவிதிப்பு விகிதத்தை மாற்றியமைக்கும் பணியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு நமது இந்திய அரசாங்கம் பன்முக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, வாகனங்கள் விஷயத்தில் சில கடுமையான நடவடிக்கைகளை அது எடுத்து வருகின்றது. மிக முக்கியமாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீது மக்களுக்கு நிலவும் மோகத்தைக் குறைக்கும் முயற்சியில் அது தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, இயற்கை எரிவாயு, ஹைபிரிட் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் ஹைபிரிட் மற்றும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் வாகனங்கள் மிகக் குறைவான காற்று மாசுபாட்டையே ஏற்படுத்துகின்றன.

எனவேதான் அரசு இந்த வாகனங்களை பிரபலப்படுத்தும் முயற்சியில் தற்போது களமிறங்கியிருக்கின்றது. ஏற்கனவே, மின்சார வாகனத்தின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில், அவற்றிற்கு மானியம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகையால், கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பல மடங்கு சூடுபிடித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையில், மின்சார வாகனங்களைப் போலவே ஹைபிரிட் வாகனங்களின் பக்கமும் மக்களை ஈர்க்கும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு, மாசு உமிழ்வு திறனுக்கு ஏற்ப வாகனங்களுக்கு வரி விதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், மாசை மிகக் குறைவாக வெளிப்படுத்தும் ஹைபிரிட் வாகனங்களின் விலை பல மடங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மற்றும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கும் குறைவான வரி நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களுக்கும் குறைவான வரி விதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றன. இதனால், தற்போது மிக உயரிய விலையைக் கொண்டிருக்கும் இந்த வாகனங்களின் விலை பல மடங்குக் குறையும்.

ஹைபிரிட் வாகனம்:
ஹைபிரிட் வாகனம் என்பது பெட்ரோல் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டாலும் இயங்கக் கூடியவை ஆகும். இதற்காக பெட்ராலால் இயங்கும் மோட்டார் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் என இரண்டும் இந்த ரக கார்களில் வழங்கப்படும். மேலும், மின் மோட்டாரை இயக்குவதற்கென தனி பேட்டரி பேக்கும் ஹைபிரிட் காரில் இடம் பெற இருக்கும்.

இந்த பேட்டரி பேக்கை காரின் ஓட்டத்தின்போதே சார்ஜ் செய்து கொள்ளுதல் அல்லது தனியாக சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தல் என இரு விதமான வசதிகளுடன் வாகன உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு வழங்குகின்றனர். இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஹைபிரிட் கார்களுக்கான வரியையே அரசு குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருண் கோயல் வெளியிட்ட விபரம்:
சமீபத்தில், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Automobile Manufacturers) நடத்திய கூட்டத்தில் கலந்துக் கொண்ட மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் அருண் கோயல், வாகனங்களின் உமிழ்வு திறன் அடிப்படையில் வரிவிதிப்பு விகிதங்களை சீரமைக்கும் பணியில் களமிறங்கியிருப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய வரி விபரம்:
தற்போது பவர்டிரெயின் (மோட்டார்களின்) வகைகளை அடிப்படையாகக் கொண்டே வரி விதிப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இருப்பதிலேயே மிகக் குறைவாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு 20 சதவீதம் வரியும், ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்களுக்கு 43 சதவீதம் டேக்ஸும் விதிக்கப்படுகின்றது.

1.2 லிட்டர் அல்லது இதற்கும் குறைவான சிறிய ரக மோட்டார் கொண்ட சப்-4 மீட்டர் ரக வாகனங்களுக்கு 29 சதவீதம் வரியும், 1.2 லிட்டர் - 1.5 லிட்டர் சப்-4 மீட்டர் வாகனங்களுக்கு 31 சதவீதமும், 4மீட்டருக்கும்., அதிகமான நீளம் கொண்ட 1.5 லிட்டர் அல்லது இதற்கும் குறைவான சிறிய எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கு 45 சதவீதமும், 1.5 லிட்டர் மற்றும் இதைவிட பெரிய எஞ்ஜின் கொண்ட 4மீ பிளஸ் வாகனங்களுக்கு 48 சதவீதம் வரி வசூலிக்கப்படுகின்றது. இந்த முறையை மாற்றியமைக்கும் பணியில் அரசு தற்போது களமிறங்கியிருக்கின்றது.

இவற்றில் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் ஹைபிரிட் வாகனங்கள் மிக குறைவான மாசை வெளியேற்றுபவையாக இருப்பதனால் இவற்றிற்கான வரி பல மடங்கு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான வரி அதிகரிப்புச் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, டீசல் வாகனங்களுக்கு வரி மிகக் கடுமையாக உயர்த்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது.

ஏற்கனவே அரசு மேற்கொண்டு வரும் புதிய மாசு உமிழ்வு விதிகளின் காரணத்தினால் நாட்டை விட்டு சிறிய டீசல் மோட்டார் வாகனங்கள் வெளியேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலில் அதிக வரி விதிப்பு டீசல் வாகனங்களின்மீது திணிக்கப்படும் எனில் அவற்றிற்கான வரவேற்பு குறையும் சூழல் ஏற்படலாம். அதேவேலையில், மின்சாரம் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் அதிகரிக்கத் தொடங்கலாம்.

தற்போது இந்திய சந்தையில்:
ஹோண்டா அதன் சிட்டி இ:எச்இவி காரையும், டொயோட்டா அதன் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரிலும், மாருதி சுஸுகி அதன் கிராண்ட் விட்டாரா மாடலிலும் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பட்டியல் வெகுவிரைவில் அதிகரிக்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








