பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ உயர்ந்தாலும் கவலையே இல்ல... இந்த மாசம் 2 சிஎன்ஜி கார்கள் விற்பனைக்கு வரப்போகுது!
நடப்பு அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படும் 2 சிஎன்ஜி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் பலர் சிஎன்ஜி கார்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பி வருகின்றனர். குறிப்பாக தற்போது பண்டிகை காலம் என்பதால், புதிய சிஎன்ஜி கார்களை வாங்குவதற்கு பலரும் திட்டமிட்டுள்ளனர். இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி.

ஆம், இந்திய சந்தையில் நடப்பு அக்டோபர் மாதம் 2 சிஎன்ஜி கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிஎன்ஜி கார்களுக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு அக்டோபர் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் 2 சிஎன்ஜி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி (Maruti Suzuki Baleno CNG)
இந்தியாவில் தற்போதைய நிலையில் சிஎன்ஜி கார் விற்பனையில் முன்னணி இருக்கும் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுஸுகி. தனது சிஎன்ஜி கார் லைன்-அப்பை விரிவுபடுத்தும் பணியில் மாருதி சுஸுகி நிறுவனம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பலேனோ காரின் சிஎன்ஜி வெர்ஷனை நடப்பு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 77 பிஎஸ் பவரையும், 98.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும். இந்திய சந்தையில் பலேனோ சிஎன்ஜி காரின் விலை 8-9 லட்ச ரூபாயாக இருக்கலாம் (எக்ஸ் ஷோரூம்) என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ கார் திகழ்கிறது. இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி (Toyota Glanza CNG)
மாருதி சுஸுகி பலேனோ காரில் வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி காரிலும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி காரை தொடர்ந்து, டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா க்ளான்சா காரும், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா. டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

இந்த கூட்டணியின் அடிப்படையில், இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. இதன்படி இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தால் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றுதான் க்ளான்சா.

மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வரும் நிலையில், டொயோட்டா நிறுவனமும் க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முழு மூச்சில் ஆயத்தமாகி வருகிறது. மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய 2 கார்களுக்கும் இந்திய சந்தையில் நிறைய போட்டியாளர்கள் இருக்கின்றன.

இதில், ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), ஹோண்டா ஜாஸ் (Honda Jazz) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். சிஎன்ஜி வெர்ஷன்களின் வருகைக்கு பின், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய 2 கார்களின் விற்பனையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்
புதிய நிஸான் கார் (New Nissan Car)
இந்த 2 சிஎன்ஜி கார்கள் தவிர, நிஸான் நிறுவனமும் நடப்பு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த காராக இருக்கலாம். அத்துடன் இது எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








