3 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரெடியாகும் மாருதி சுஸுகி நிறுவனம்... விட்டதை பிடிக்க ஆயத்தம்!
மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு 3 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி பெற்றுள்ளது. ஆனால் சமீப காலமாக மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு போட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே வரும் ஆண்டுகளில் விற்பனையில் இழந்ததை திரும்ப பெறுவதற்காக பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில், 3 புதிய கார்கள் நடப்பாண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவற்றை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சிறிய அப்டேட்களுடன் வரவுள்ள பலேனோ சிஎன்ஜி போன்ற கார்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும்.

புதிய மிட்-சைஸ் எஸ்யூவி
மாருதி சுஸுகி நிறுவனமும், டொயோட்டா நிறுவனமும் இணைந்து இந்திய சந்தைக்கென புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை உருவாக்கி வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் ஒரு சில மாற்றங்களுடன் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை தங்கள் பிராண்டில் விற்பனை செய்யவுள்ளன. வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகளை டொயோட்டா நிறுவனம் கையாளவுள்ளது. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களுடன் மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்களின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் போட்டியிடவுள்ளது.

சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே கூட்டணி அமைத்திருப்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் ரெகுலர் வாசகர்களுக்கு தெரியும். இந்த கூட்டணியின் அடிப்படையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ ஆகிய 2 கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. அவை முறையே டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் டொயோட்டா க்ளான்சா என்ற பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதிய தலைமுறை ஆல்டோ
மாருதி சுஸுகி நிறுவனத்தின் விலை குறைவான கார்களில் முக்கியமானது ஆல்டோ. இந்த கார் வெகு விரைவில் புதிய தலைமுறை அப்டேட்டை பெறவுள்ளது. Heartect பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படும் இந்த புதிய தலைமுறை மாடல், தற்போதைய மாடலை காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும்.

தற்போதுள்ள 0.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் புதிய தலைமுறை மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படலாம். ஆனால் மைலேஜை அதிகரிப்பதற்கும், மாசு உமிழ்வை குறைப்பதற்கும் தேவையான அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த ஹேட்ச்பேக்கில் சிஎன்ஜி தேர்வு தொடர்ந்து வழங்கப்படவுள்ளது.

புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா
மாருதி சுஸுகி நிறுவனம் வரும் மாதங்களில் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. வெறும் 'பிரெஸ்ஸா' என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை அப்டேட் என்பதால், டிசைன் மாற்றங்கள் மட்டுமல்லாது, பல்வேறு புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்படவுள்ளன.

புதிய தலைமுறை பிரெஸ்ஸா காரில், புதிய K15C பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்ஜின்தான் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய கார்களிலும் வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரில் சிஎன்ஜி தேர்வையும் வழங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications