டாடா பிராண்டில் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ள கார்கள்!! 2022 நெக்ஸான் இவி -யில் இருந்து சியர்ரா இவி வரையில்!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி பயணிகள் கார்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. கார்கள் விற்பனையில் ஹூண்டாய் உடன் இரண்டாவது இடத்திற்கு மல்லுக்கட்டி வரும் டாடா மோட்டார்ஸ் அடுத்ததாக கஸிரங்கா எடிசன் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.

அதேநேரம் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பிலும் டாடா நிறுவனம் ஈடுப்பட்டு வருவது நமக்கு தெரிந்த விஷயம்தான். இதனால் டாடா பிராண்டில் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ள கார்களிலும் சில எலக்ட்ரிக் கார்கள் உள்ளன. இந்த எலக்ட்ரிக் கார்கள் உள்பட டாடா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் 5 கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்டேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் இவி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக நெக்ஸான் இவி -ஐ அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய நெக்ஸான் இவி -யின் சோதனை மாதிரிகளை இதற்குமுன் சிலமுறை பொது சாலைகளில் அடையாளப்படுத்தி இருந்தோம். தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் புதிய நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிக ரேஞ்சை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அளவில் சற்று பெரிய 40kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு புதிய நெக்ஸான் இவி -யில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்டேட் செய்யப்படும் நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தினை நடப்பு 2022ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கிறோம்.

டாடா அல்ட்ராஸ் இவி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸினை எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவரவுள்ளதாக பல மாதங்களுக்கு முன்பு இருந்தே கூறிவருகிறோம். ஏனெனில் கிட்டத்தட்ட முழுமையாக வடிவமைக்கப்பட்ட அல்ட்ராஸ் இவி 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

அல்ட்ராஸ் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரினை டாடா நிறுவனம் இந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் இவி -யில் வழங்கப்பட உள்ள அளவில் பெரிய பேட்டரி தொகுப்பு தான் அல்ட்ராஸ் இவி-யிலும் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நடுத்தர-அளவு எஸ்யூவி (டாடா ப்ளாக்பேர்டு)
மேற்கூறப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமில்லாமல், சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்டவற்றின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் புதியதொரு நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் வடிவமைப்பு பணிகளிலும் டாடா மோட்டார்ஸ் தன்னை ஈடுப்படுத்தி வருகிறது.

நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவியின் எக்ஸ்1 ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கூபே-ஸ்டைல் எஸ்யூவியாக இது விளங்கவுள்ளதாம். தற்போதைக்கு ப்ளாக்பேர்டு என அழைக்கப்படும் இந்த புதிய டாடா நடுத்தர-அளவு எஸ்யூவி கார் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் & டர்போ-டீசல் என்ஜின் தேர்வுகளுடன் அடுத்த 2023இல் அறிமுகப்படுத்தப்படலாம்.

டாடா பஞ்ச் டர்போ/இவி
டாடா பிராண்டில் இருந்து கடைசியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அளவில் சிறிய மைக்ரோ-எஸ்யூவி காரான பஞ்ச் தற்போதைக்கு ஒரேயொரு 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் டாடா பஞ்ச் மாடலுக்கு 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு புதியதாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பஞ்ச் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனும் வடிவமைப்பு பணிகளில் உள்ளதாம். எங்களுக்கு தெரிந்தவரையில் டாடா பஞ்ச் காரில் முதலாவதாக டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு நடப்பாண்டின் இறுதியில் வழங்கப்படலாம். அதனை தொடர்ந்து பஞ்ச் இவி அடுத்த 2023இல் அறிமுகப்படுத்தப்படலாம்.

டாடா சியர்ரா இவி
2020 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனத்தின் சார்பில் பல கான்செப்ட் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் சியர்ரா இவி மாடலின் கான்செப்ட்டும் ஒன்றாகும். நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்திருந்த சியர்ரா இவி கான்செப்ட்டில் இருந்து தயாரிப்பு மாடலை உருவாக்குவதற்கு சமீபத்தில்தான் டாடா மோட்டார்ஸ் பச்சை கொடி காட்டியது.

டாடா பிராண்டின் ஒமேகா ப்ளாட்ஃபாரத்தின் இவி-வெர்சனான சிக்மா ப்ளாட்ஃபாரத்தில் சியர்ரா இவி வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வடிவமைப்பு பணிகள் இப்போதே துவங்கப்பட்டாலும், கார் முழுவதுமாக தயாராகி அறிமுகப்படுத்தப்படுவதற்குள் எப்படியிருந்தாலும் 2025 வந்துவிடும்.


Click it and Unblock the Notifications








