போற போக்கை பாத்தா நாம காரே வாங்க முடியாது போலயே... நடக்கறது எல்லாம் பாத்தா அப்படிதான் தோணுது!
புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு கவலையளிக்கும் வகையில் மேலும் ஒரு அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி கொண்டுள்ளது. இதை முன்னிட்டு புதிய கார்களை வாங்குவதற்கு பலரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு கவலையளிக்கும் வகையிலான அதிரடி அறிவிப்புகள் தற்போது தொடர்ச்சியாக வெளியாகி கொண்டுள்ளன. கார்களின் விலை உயர்வு பற்றிய அறிவிப்புகள்தான் அவை.

இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு முன்னணி நிறுவனமும் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஒவ்வொரு காரின் விலையும் எவ்வளவு உயர்த்தப்படவுள்ளது? என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

2 சதவீதம் வரை விலைகள் உயர்த்தப்படும் என்பது மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒவ்வொரு காரின் விலையும் எவ்வளவு உயரும்? என்பது வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால்தான் விலைகளை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் விர்டுஸ் (Volkswagen Virtus) உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள 2 கார்களுக்கும்தான் வாடிக்கையாளர்கள் தற்போது உற்சாகமான வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக், சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள், ஃபோக்ஸ்வேகன் டைகுனின் மிகவும் முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.

அதேபோல் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருடனும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிடும். மறுபக்கம் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரானது, செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய செடான் கார்கள் இதன் முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகிய இரண்டு கார்களும் வெவ்வேறு செக்மெண்ட்களை சேர்ந்தவை என்றாலும் கூட, இந்த 2 கார்களுக்கும் இடையே பிளாட்பார்ம் உள்பட நிறைய ஒற்றுமைகள் உள்ளன. வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மட்டும் தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. கூடவே இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதன்படி மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது கார்களின் விலைகளை உயர்த்தியது.

இதேபோல் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனமும் தனது கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. எம்ஜி நிறுவனத்தின் அஸ்டர், ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் ஆகிய கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் கார்களின் விலைகளை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ள இந்திய வாடிக்கையாளர்கள் இதனால் கவலையடைந்துள்ளனர். ஆனால் இந்த அதிரடி விலை உயர்வானது, பண்டிகை காலத்தில் புதிய கார்களின் விற்பனையை பாதிக்குமா? என்பதை நாம் கொஞ்சம் நாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








