இந்தியாவை விட்டு பிரிகிறது... ஃபோக்ஸ்வேகன் போலோ எழுதிய உருக்கமான கடிதம்... கண் கலங்கும் ரசிகர்கள்!
இந்தியாவை விட்டு பிரியவுள்ள நிலையில், ஃபோக்ஸ்வேகன் போலோ உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பிரபலமான கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo). இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ போட்டியிட்டு வருகிறது.

இந்த சூழலில், இந்திய சந்தையில் போலோ காரின் விற்பனையை நிறுத்தவுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. போலோ ரசிகர்கள் மத்தியில் இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ சாதாரண ஹேட்ச்பேக் மட்டும் கிடையாது. இந்த காரை சொந்தமாக வைத்திருக்கும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் உணர்வு அது.

இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகச்சிறந்த Fun-to-drive கார் என ஃபோக்ஸ்வேகன் போலோவை குறிப்பிடலாம். சிறப்பான செயல்திறன் மற்றும் கையாளுமை ஆகியவற்றில் போலோவிற்கு நிகர் போலோதான். எனவேதான் ஃபோக்ஸ்வேகன் போலோ பிரியாவிடை பெறுவது, அதன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. போலோ நம்மிடம் பேசுவது போன்று அந்த கடிதம் மிகவும் உருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தன்னுடைய 12 ஆண்டு கால பயணத்தை ஃபோக்ஸ்வேகன் போலோ இந்த கடிதம் மூலமாக நம் அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளது.

'சாலைகள் அழகானவைதான். ஆனால் அவை அனைத்தும் எதாவது ஒரு இடத்தில் முடிவடைந்து விடும்' என்று இந்த கடிதம் மிக உருக்கமாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆண்டுகள் இடைவிடாத ஆக்ஸலரேஷனுக்கு பிறகு, நான் பிரேக் பிடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என போலோ கூறுவது போலவும் இந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் முதல் முறையாக உற்பத்தி தொடங்கப்பட்டதையும், முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதையும் அன்புடன் நினைவு கூர்வதாகவும் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே சஹான் பகுதியில் இருக்கும் ஆலையில், ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் உற்பத்தி பணிகள் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

அதை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் 12 ஆண்டு கால இந்திய பயணம் தற்போது முடிவுக்கு வருகிறது. அத்துடன் இன்ஜினியர்கள், டீலர்கள், சர்வீஸ் மெக்கானிக்குகள் ஆகியோருடன் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கடிதத்தில் போலோ நன்றி தெரிவிப்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

'நான் வரும்போது சாதாரண ஹேட்ச்பேக்காக மட்டுமே இருந்தேன். ஆனால் அனைவராலும் விரும்பக்கூடிய ஹேட்ச்பேக்காக நீங்கள் என்னை மாற்றி விட்டீர்கள்' எனவும் இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நான் விடைபெறுவதால், என்னுடைய மரபை எனது எஸ்யூவி மற்றும் செடான் உடன்பிறப்புகளிடம் விட்டு செல்கிறேன் எனவும் போலோ தெரிவிப்பது போல் இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

'அவர்கள் இதனை முன்னெடுத்து செல்வார்கள் என்பது உறுதி' எனவும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் மற்றும் விர்டுஸ் ஆகிய கார்களைதான் போலோ சுட்டிக்காட்டுவது போல் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் டைகுன் எஸ்யூவி காரை களமிறக்கியது.

இதற்கு அடுத்தபடியாக விர்டுஸ் செடான் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 கார்களிடமும் போலோ தனது மரபை விட்டு செல்வது போல் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் இறுதியில், 'என்னை எப்போதும் உங்கள் மனதில் வைத்திருங்கள்' என போலோ தெரிவிப்பது போன்று எழுதப்பட்டுள்ளது.

இந்த உருக்கமான கடிதம், ஃபோக்ஸ்வேகன் போலோ ரசிகர்களின் மனங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் விடைபெறுவதை முன்னிட்டு, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ காரின் லெஜெண்ட் எடிசனை வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








