இப்படி ஒரு வளர்ச்சியா!.. விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஃபோக்ஸ்வேகன்... நம்பவே முடியல!
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றது. நிறுவனம் பெற்றிருக்கும் மாபெரும் விற்பனை வளர்ச்சிய பற்றிய தகவலைக் கீழே பார்க்கலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) இந்தியாவில் வாகன விற்பனையில் கணிசமான வளர்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் 4,028 யூனிட் தயாரிப்புகள் விற்பனையாகியிருக்கின்றன. இது 2021ம் ஆண்டு பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை உடன் ஒப்பிட்டால் 84 சதவீதம் அதிக விற்பனையாகும்.

ஆகையால், மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியை ஃபோக்ஸ்வேகன் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு சில நிறுவனங்களே சிறந்த விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றாக 84 சதவீதத்துடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இடம் பிடித்திருக்கின்றது.

நிறுவனத்தின் புதுமுக காரான டைகுன் வருகையாலேயே இத்தகைய சிறப்பான வளர்ச்சியை தங்கள் நிறுவனத்தால் எட்ட முடிந்தது நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. டைகுன் ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும். இந்த காரை ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

இந்த காரில் எண்ணற்ற சிறப்பு வசதிகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. 8 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆம்பிசியண்ட் மின் விளக்கு, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், டைப்-சி ரக யூஎஸ்பி போர்ட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங், கூல்டு க்ளோவ் பாக்ஸ், சன்ரூஃப் மற்றும் கார் இணைப்பு செயலி உள்ளிட்ட அம்சங்கள் டைகுன் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுமட்டுமின்றி காருக்கு கவர்ச்சி சேர்க்கும் வகையில் 17 இன்ச் அலாய் வீல்கள், முன் பக்கத்தில் பெரிய எல்இடி ஹெட்லைட் மற்றும் பகல் நேர விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இக்கார் தாங்கியிருக்கின்றது. எனவேதான் இந்தியாவில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இதற்கு கிடைத்த அமோகமான வரவேற்பை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை தற்போது வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்றிருக்கின்றது. நிறுவனம் மிக விரைவில் விர்சுஸ் எனும் புதுமுக காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

தற்போது விற்பனையில் இருக்கும் வென்டோ செடான் காரை ரீபிளேஸ் செய்யும் விதமாக இக்காரின் வருகை அமைய இருக்கின்றது. நடப்பு மார்ச் மாதம் அல்லது அடுத்த ஒரு சில மாதங்களில் இக்காரின் வருகை அமைய இருக்கின்றது. இந்த காரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை வளர்ச்சி பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நம்பப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் இந்தியாவில் 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதே நேரத்தில், இதன் உயர் நிலை வேரியண்ட் 17 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என்ற அதிகபட்ச விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டுமே விலைகளுமே எக்ஸ் ஷோரூம் மதிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உச்சபட்ச விலைக் கொண்ட காரையே அண்மையில் பிரபல நடிகை கௌரி கிஷான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








