அப்படிப்போடு... Volkswagen Virtus காருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள மிக முக்கியமான காராக விர்டுஸ் (Volkswagen Virtus) பார்க்கப்படுகிறது. இது மிட்-சைஸ் செடான் கார் ஆகும். வயதாகி விட்ட ஃபோக்ஸ்வேகன் வெண்ட்டோ (Volkswagen Vento) காருக்கு பதிலாக, விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் அறிமுகம் தாமதமாகி கொண்டே வந்த சூழலில், இந்த காரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவர்களுக்கு உற்சாகமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வரும் மார்ச் 8ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அதை தொடர்ந்து மே மாதத்தின் இரண்டாவது பாதியில் இந்த கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக மே மாதத்தின் 3வது வாரத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெண்ட்டோவை விட விர்டுஸ் தோற்றத்தில் பெரிய காராக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே MQB A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கார்களின் பவர்ட்ரெயின் தேர்வுகள்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரிலும் வழங்கப்படவுள்ளது.

இதன்படி டைகுன், குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய கார்களை போன்று, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரிலும் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளது. இதில், 115 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மூன்று-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 150 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டிஎஸ்ஐ நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

இதில், 1.0 லிட்டர் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில், 10.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் செடான் கார்களுக்கு தற்போது பெரிதாக வரவேற்பு இல்லை. எஸ்யூவி கார்களிடம் அவை செல்வாக்கை இழந்து கொண்டுள்ளன.

ஆனால் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா 2 கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதில், ஸ்கோடா ஸ்லாவியா கார் வரும் பிப்ரவரி 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம் ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் இன்ஜின் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதை தொடர்ந்து 1.5 லிட்டர் இன்ஜின் மாடல் வரும் மார்ச் 3ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. விர்டுஸ் மற்றும் ஸ்லாவியா ஆகிய 2 செடான் கார்களும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய 2 நிறுவனங்களுக்கும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய 2 நிறுவனங்களும் இந்திய சந்தையில் தங்களது விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான முயற்சிகளை முழு வீச்சில் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகதான் விர்டுஸ் மற்றும் ஸ்லாவியா போன்ற புத்தம் புதிய கார்களை அந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யவுள்ளன. முன்னதாக ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய 2 நிறுவனங்களும் விற்பனைக்கு களமிறக்கிய டைகுன் மற்றும் குஷாக் ஆகிய 2 மிட்சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








