போட்றா வெடிய... மிகப்பெரிய ஆர்டரை தட்டி தூக்கீட்டாங்க... எலெக்ட்ரிக் பஸ்களை பல்க்கா டெலிவரி செய்ய போகும் டாடா!
டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பஸ்களை மொத்தமாக டெலிவரி செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவும் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு அடுத்த 2 ஆண்டுகளில், 1,200 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதில், 400 எலெக்ட்ரிக் பஸ்கள் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

மேற்கு வங்க மாநில போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சிஎன்ஜி பஸ்களை மிக அதிகளவில் அறிமுகம் செய்வதற்கும் அம்மாநில போக்குவரத்து கழகம் அதிரடியாக திட்டமிட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''கொல்கத்தா மாநகர பகுதிகளில், அடுத்த 2 ஆண்டுகளில், 1,200 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். இதில், 400 எலெக்ட்ரிக் பஸ்கள் வரும் ஜனவரி மாதமே கொல்கத்தா சாலைகளில் ஓட தொடங்கி விடும்'' என்றனர். கொல்கத்தா அரசின் இந்த முயற்சியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பஸ்கள், கார்பன் உமிழ்வை நிச்சயமாக குறைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொல்கத்தா நகரில் இயக்கப்படவுள்ள 1,200 எலெக்ட்ரிக் பஸ்களும், டாடா நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இதில் சுமார் 750 பஸ்கள், 12 மீட்டர் நீளத்தில் இருக்கும். எஞ்சிய பஸ்கள் 8 மீட்டர் நீளத்தில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.

அதேபோல் எலெக்ட்ரிக் பஸ்கள் சந்தையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கத்தை நம்மால் காண முடிகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் போக்குவரத்து கழகத்திற்கு மட்டுமல்லாது, இந்தியா முழுக்க இன்னும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களின் போக்குவரத்து கழகங்களுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

தற்போதைய நிலையில் மும்பை, பெங்களூர் உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கியமான பெரு நகரங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விட்டன. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் நகரங்களின் எண்ணிக்கை விறுவிறுவென அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








