முன்பதிவு செய்து மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்காக காத்திருக்கும் சுமார் 78 ஆயிரம் பேர்!!
மாடர்ன் மஹிந்திரா காராக களமிறக்கப்பட்ட எக்ஸ்யூவி700 மாடலின் விற்பனை எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், முன்பதிவு செய்து இந்த காரின் டெலிவிரிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அதன் எக்ஸ்யூவி700 எஸ்யூவி மாடலை கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது. முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் புதிய பிராண்ட் லோகோ உடன் அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டதால், எதிர்பார்த்ததை போல் இந்த காருக்கு வரவேற்பு எகிறியது.

அறிமுகத்திற்கு பிறகு சில மாதங்களிலேயே எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்கிற இமாலய இலக்கை எட்டிவிட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 10,000 எக்ஸ்யூவி700 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த அதிகப்படியான தேவையை மஹிந்திரா நிறுவனத்தால் சமாளிக்க முடிகிறதா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

தற்சமயம் பெரிய அளவில் இல்லையென்றாலும், கடந்த ஆண்டில் பல மாதங்களில் குறைக்கடத்திகளின் உலகளாவிய பற்றாக்குறையால் மஹிந்திரா நிறுவனம் கடுமையாக போராடியது. எந்த அளவிற்கு என்றால், அறிமுகத்தில் இருந்து கடந்த 2022 ஏப்ரல் மாதம் முடியும் வரையில் வெறும் 30 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே முன்பதிவு செய்துவிட்டு டெலிவிரிக்காக கிட்டத்தட்ட 78 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 உள்பட எந்தவொரு காருக்கும் காத்திருப்பு காலம் ஆனது நகரம் மற்றும் டீலர்ஷிப்பை பொறுத்து மாறக்கூடும். இந்த மஹிந்திரா எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலமானது 18 மாதங்களில் இருந்து 24 மாதங்கள் வரையில் உள்ளது. அதாவது எக்ஸ்யூவி700-ஐ இப்போது புக் செய்தால், அடுத்த 2023ஆம் வருடத்திலோ அல்லது அதற்கடுத்த 2024ஆம் வருடத்திலோ தான் டெலிவிரி எடுக்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.

இதனாலேயே முன்பதிவு செய்பவர்களில் சிலர் புக்கிங்கை ரத்து செய்துவிடுகின்றனர். இவ்வாறு ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை ஆனது மொத்த முன்பதிவுகளில் 10இல் இருந்து 12 சதவீதம் வரையில் உள்ளது. குறிப்பாக, எக்ஸ்யூவி700 காரை டீசல் என்ஜின் உடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. இதனாலேயே இதன் பெட்ரோல் வேரியண்ட்களை காட்டிலும் டீசல் வேரியண்ட்களுக்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியதாக உள்ளது.

எக்ஸ்யூவி700 மாடலின் ஆரம்ப-நிலை எம்.எக்ஸ் பெட்ரோல் வேரியண்ட்டை குறைந்தப்பட்சமாக 3-4 மாதங்களில் டெலிவிரி பெற்றுவிடலாம். அதுவே எம்.எக்ஸ் வேரியண்ட்டின் டீசல் வேரியண்ட்டிற்கு 6 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மத்திய-நிலை ஏஎக்ஸ்5 பெட்ரோல் வேரியண்ட் 6 மாதங்கள் வரையிலும், இந்த ட்ரிம் நிலையில் டீசல் வேரியண்ட்களுக்கு 8 மாதங்கள் வரையிலும் காத்திருப்பு காலம் உள்ளது. ஏஎக்ஸ்7 பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டிற்கு 6 மாதங்கள் வரையில் காத்திருப்பு காலம் உள்ளது.

மிகுந்த தேவையில் இருக்கும் ஏஎக்ஸ்7 எல் (லக்சரி தொகுப்பு) வேரியண்ட்டை பெட்ரோல் (அ) டீசல் என்ஜின் உடன் வாங்க நினைப்பவர்கள் 8-இல் இருந்து 10 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டும். இந்த வேரியண்ட்டில் வழங்கப்படும் லக்சரி தொகுப்பில் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிப்பான், தொடர்ச்சியான டிஜிட்டல் வீடியோ பதிவு, 360-கோண கேமிரா பார்வை, கால் முட்டிகளுக்கும் காற்றுப்பை, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இவை மட்டுமின்றி, எலக்ட்ரிக் ஸ்மார்ட் கதவு கைப்பிடிகள் மற்றும் வயர் இல்லா சார்ஜிங் போன்றவையும் இந்த தொகுப்பில் உட்படுகின்றன. இவற்றுடன் ஏற்கனவே கூறியதுபோல், அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சத்தை தனது எக்ஸ்யூவி700 மாடலில் மஹிந்திரா வழங்கி வருகிறது. எம்ஜி மோட்டாரை தவிர்த்து ADAS-ஐ வழங்குவதில் இன்னமும் மாருதி சுஸுகி, ஹூண்டாய், கியா போன்ற முன்னணி பிராண்ட்கள் பின்தங்கியே உள்ளன.

சுருக்கமாக ADAS என அழைக்கப்படும் அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களில் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்க மோதல் எச்சரிப்பான், சாலையில் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி, டிராஃபிக் சிக்னல் அடையாளம் காண்பான், தானியங்கி அவசரகால பிரேக் மற்றும் ஸ்மார்ட் பைலட் உதவி உள்ளிட்டவை அடங்குகின்றன. இத்தகைய அம்சங்களினால் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களை எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








