ரூ. 10 நாணயங்களை கொண்டு 6 லட்ச ரூபா காரை வாங்கிய தருமபுரி இளைஞர்! யுட்யூபில் ஃபேமஸாவதற்கு அல்ல! வேறு எதற்கு?
தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பத்து, பத்து ரூபாய் நாணயங்களாக சேர்த்து ஆறு லட்ச ரூபா மதிப்புள்ள மாருதி சுஸுகி காரை வாங்கியிருக்கின்றார். இளைஞரின் இந்த செயலுக்கான ஆச்சரியமளிக்கும் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

தருமபுரி அரூர் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவரே ஆறு லட்ச ரூபாயை பத்து, பத்து ரூபாய் நாணயங்களாக சேர்த்து வைத்தவர் ஆவார். இந்தியாவில் பலர் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கவே தயக்கம் காட்டுகின்ற சூழலில், சுமார் ஒரு மாதம் செலவிட்டு அவர் பத்து ரூபாய் நாணயங்களைச் சேர்த்து வைத்திருக்கின்றார்.

மேலும், சேர்த்து வைத்த நாணயங்களைக் கொண்டு அவர் மாருதி சுஸுகி ஈகோ கார் ஒன்றையும் வாங்கியிருக்கின்றார். ஏன் இவ்வாறு அந்த இளைஞர் செய்தார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழும்பியிருக்கும். அதேநேரத்தில், யுட்யூப் போன்ற பிற சமூக வலைதளங்களில் ஃபேமஸாவதற்காக இளைஞர்கள் சிலர் இவ்வாறு சில்லறைகளைப் பெரும் தொகையாக சேமித்து கடந்த காலங்களில் புதிய வாகனங்களை வாங்கியதுண்டு.

அந்தவகையில், தருமபுரியைச் சேர்ந்த இளைஞரும் தன்னை சமூக வலைதளத்தில் ஸ்டாராக ஆக்கிக் கொள்ள இவ்வாறு செய்திருப்பார் என்றே யூகிக்கப்பட்டது. ஆனால், இளைஞரோ முற்றிலும் மாறுபட்ட ஸ்டோரியை இதற்கு கூறியிருக்கின்றார்.

இளைஞரின் தாய் அரூர் பகுதியில் ஓர் கடையை நடத்தி வருகின்றார். அவரிடத்தில் பத்து ரூபாய் நாணயங்களின் புழக்கம் சற்று அதிகரித்துக் காணப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில் வாடிக்கையாளர்கள் சிலரோ அவரிடத்தில் இருந்து பத்து ரூபாய் காயின்களை வாங்க மறுத்திருக்கின்றனர். இதனால், வெற்றிவேல் வீட்டில் பத்து ரூபாய் நாணயங்களுக்கு பஞ்சம் இருக்காது.

ஒரு கட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்திராத அளவு பத்து ரூபாய் காயின்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டிருக்கின்றது. இதேபோல், சில நேரங்களில் அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவர்கள் சிலர் பத்து ரூபாய் நாணயங்களைக் கொண்டு விளையாடுவதையும் அவர் கண்டிருக்கின்றார்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பத்து ரூபாய் காயின்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இளைஞர் வெற்றிவேல் அந்த காயின்களைக் கொண்டே காரை வாங்க வேண்டும் என நினைத்திருக்கின்றார். அதை தற்போது அவர் செய்தும் காட்டியிருக்கின்றார்.

முதலில் பத்து ரூபாய் காயின்களைப் பெற்றுக் கொண்டு காரை விற்க ஷோரூம் நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கின்றது. ஆனால், இளைஞரின் தொடர் முயற்சியால் பின்னர் கார் விற்பனையாளர் ஒப்புதல் தெரிவித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்தே ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள மாருதி சுஸுகி ஈகோ காரை வெற்றிவேல் வாங்கியிருக்கின்றார். இளைஞரின் இந்த செயல் தற்போது தருமபுரி மக்களிடையே பாராட்டைப் பெற்றிருக்கின்றது.

10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் என்ன?
புழக்கம் எதிகம் என்பதனால் மதிப்பு குறைவான பத்து, இருபது மற்றும் 50 ரூபாய் தாள்கள் எளிதில் சேதமடைந்துவிடுகின்றன. குறிப்பாக, பத்து ரூபாய் தாள்கள் வெகு விரைவில் ஆயுட்காலத்தை இழந்துவிடுகின்றன. இந்த நிலையிலேயே 2005 ஆம் ஆண்டில் பத்து ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.

பத்து ரூபாய் தாளை உருவாக்குவதைக் காட்டிலும் இந்த காயினை உருவாக்குவதில் வேலையும், செலவும் அதிகம். இருப்பினும், அவற்றை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தின. தாள்களைக் காட்டிலும் காயின்களுக்கு ஆயுட் காலம் என்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

ஆனால், இவற்றை பெருமளவில் பெறும்போது அவற்றை எண்ணுவது மிக சிரமமானதாக இருக்கின்றது. இதன் காரணத்தினால் பலர் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். நாளடைவில் மக்கள் பலர் அந்த நாணயத்தை செல்லாத நாணயமாகவே பார்க்க தொடங்கிவிட்டனர்.

இந்த சூழலை முதலில் போக்குவரத்துத் துறையையே ஆரம்பித்து வைத்ததாகக் கூறப்படுகின்றது. அதேநேரத்தில் தங்களிடம் சேரும் அதிக எண்ணிக்கை பத்து ரூபாய் காயின்களை வங்கி ஊழியர்கள் வாங்க மறுப்பதாக போக்குவரத்துத் துறையினர் பேங்குகள் மீது புகாரை தெரிவித்தனர்.

லட்ச ரூபாய் அளவில் பத்து ரூபாய் காயின்கள் வரும் எனில் அவற்றை எண்ணுவதில் சிரமம் ஆகின்றது. மேலும், வேலை பலுவும் கூடிவிடுவதாக இதற்கு வங்கி ஊழியர்கள் தரப்பில் இருந்து காரணம் கூறப்படுகின்றது. மேலும், அவற்றை பாதுகாப்பதிலும் பெரும் சிரமம் என்கின்றனர். இந்த நிலை தற்போது பத்து ரூபாய் காயினை செல்லா நாணயமாகவே மாற்றிவிட்டன.

ஆனால், ரிசர்வ் வங்கியோ பத்து ரூபாய் காயின் செல்லும். அவற்றை புழக்கத்திற்கு ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது. பத்து ரூபாய் நாணயம்குறித்து ஏதேனும் பொய் வதந்தி கூறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், தற்போது ரயில் நிலையங்கள், பேருந்து நடத்துனர்கள், கடைக்காரர்கள் என பலர் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே பத்து, பத்து ரூபாய் நாணயங்களாக சேர்த்து இளைஞர் ஒருவர் மாருதி ஈகோ காரை வாங்கியிருக்கின்றார். இந்த வாகனத்தை 11 வருடங்களுக்கு பின்னர் இப்போது அப்டேட் செய்யும் பணியில் மாருதி சுஸுகி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் பவர் ஸ்டியரிங் மற்றும் டிசைனில் லேசான மாற்றம் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரத்தில், இக்காரை மலிவான விலையில் கொண்டதாக வாகனமாக சந்தையில் நிலை நிறுத்தும் வகையில் புதிய மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது இந்திய பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பள்ளி சிறுவர்களை ஏற்றி செல்லுதல், சரக்குகளைக் கையாளுதல் போன்ற பயன்பாட்டுகளுக்கு உகந்த வாகனமாக விளங்குகின்றது. இத்தகைய வாகனத்தையே பத்து ரூபாய் நாணயம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தருமபுரியைச் சேர்ந்த வெற்றிவேல் வாங்கியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








